உள்ளூர் செய்திகள்

பேருந்தின் பின்பு சாலையில் தூசி பறக்கும் காட்சி.

வள்ளியூரில் கிடப்பில் போடப்பட்ட திருச்செந்தூர் சாலைப்பணி - தே.மு.தி.க. போராட்டம் அறிவிப்பு

Published On 2022-11-16 09:13 GMT   |   Update On 2022-11-16 09:13 GMT
  • திருச்செந்தூர் செல்லும் முக்கியமான சாலையில் தூசி அதிக அளவில் கிளம்பி விடுவதால் அருகிலுள்ள சிறுகுழந்தைகள் பள்ளி மாணவ, மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
  • உடைக்கப்பட்ட சாலையை இன்னும் ஒருவார காலத்தில் சரிசெய்யாவிட்டால் தே.மு.தி.க கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் தே.மு.தி.க மாவட்ட செயலாளர் விஜிவேலாயுதம் கூறினார்.

வள்ளியூர்:

வள்ளியூரில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பிரதான சாலையை விரிவுபடுத்தப்போவதாக கடந்த 10 தினங்களுக்கு முன்னர் இரவோடு இரவாக சாலையை ராட்சத எந்திரம் மூலம் ேதாண்டினர்.

அதனைத் தொடர்ந்து சாலைப்பணிகள் தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தார் சாலை தோண்டப்பட்டதை அடுத்து சாலையில் தூசி கிளம்பி வாகனங்கள் செல்வது தெரியாத அளவுக்கு காணப்படுகிறது.

மேலும் வயதானவர்கள் இந்த சாலையை கடந்து செல்வதால் நுரையீரல் பிரச்சினை, சுவாச கோளாறு ஏற்பட்டு அவதிப்படுகின்றனர்.

திருச்செந்தூர் செல்லும் முக்கியமான சாலையில் தூசி அதிக அளவில் கிளம்பி விடுவதால் அருகிலுள்ள சிறுகுழந்தைகள் பள்ளி மாணவ, மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர். கடைகள் மற்றும் உணவு விடுதிகளில் தூசிபடிவதால் வியாபாரிகள் அவதிக்குள்ளாகின்றனர்.

இது தொடர்பாக தே.மு.தி.க மாவட்ட செயலாளர் விஜிவேலாயுதம் கூறியதாவது:-

நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் எந்தவிதமான முன்ஏற்பாடுகளும் செய்யாமல் அவசர அவசரமாக திருச்செந்தூர் சாலையை விரிவாக்கம் என்ற பெயரில் உடைத்துள்ளனர். ஆனால் இதுவரையில் சாலை அமைக்கும் பணி ஏதும் தொடங்கப்படவில்லை. சாலையை தோண்டி உடைத்துள்ளதால் வாகனங்கள் செல்லும் போது தூசி கிளம்பி சுகாதாரக்கேட்டை உருவாக்குகிறது.

இந்த சாலையையொட்டி உள்ள வியாபாரிகள், பாதசாரிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். அதிகாரிகள் மிகவும் அலட்சியமாக பதில் தெரிவித்து வருகின்றனர். உடைக்கப்பட்ட சாலையை இன்னும் ஒருவார காலத்தில் சரிசெய்யாவிட்டால் தே.மு.தி.க கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News