உள்ளூர் செய்திகள்

பிறந்து சில மணி நேரமே ஆன அனாதையாக வீசப்பட்ட குழந்தை மீட்பு- போலீஸ் விசாரணை

Published On 2023-05-25 03:33 GMT   |   Update On 2023-05-25 03:33 GMT
  • குழந்தையை கண்ட தூய்மை பணியாளர்கள் உடனடியாக மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
  • மீட்கப்பட்ட குழந்தையை ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.

மறைமலைநகர்:

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட அதியமான் தெருவில் நேற்று முன்தினம் மறைமலைநகர் நகராட்சி தூய்மை பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த தெருவில் உள்ள பூட்டப்பட்டிருந்த வீட்டின் சுற்றுச்சுவருக்குள் இருந்து குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. இதனையடுத்து அங்கு தூய்மை பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பணியாளர்கள் சென்று பார்த்த போது அங்கு பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை பசியால் அழுது கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக தூய்மை பணியாளர்கள் மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மறைமலைநகர் போலீசார் பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தையை மீட்டு மறைமலைநகரில் உள்ள சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்று குழந்தைக்கு முதலுதவி சிகிச்சைகளை அளித்தனர். மீட்கப்பட்ட குழந்தையை ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளின் அடிப்படையில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் மறைமலைநகர் அதியமான் தெருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News