உள்ளூர் செய்திகள் (District)

வைகாசி திருவிழாவையொட்டி கைலாசநாதர் கோவிலில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்த காட்சி.

நெல்லை சந்திப்பு கைலாசநாதர் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றம்- திரளான பக்தர்கள் பங்கேற்பு

Published On 2023-05-20 09:09 GMT   |   Update On 2023-05-20 09:09 GMT
  • திருவிழாவில் தொடக்க நிகழ்வான கொடியேற்றம் இன்று அதிகாலையில் நடைபெற்றது.
  • பால், தயிர், மஞ்சள், இளநீர் கொண்டு கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள பழமையான சிவாலயங்களில் ஒன்றாக நெல்லை சந்திப்பு கைலாச புரத்தில் அமைந்திருக்கும் சவுந்தரவல்லி அம்பாள் சமேத கைலாசநாதர் சுவாமி கோவில் அமைந்துள்ளது.

இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் வைகாசி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதன்படி இந்த ஆண்டு திருவிழாவானது இன்று கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது. மொத்தம் 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தொடக்க நிகழ்வான கொடியேற்றம் அதிகாலையில் நடைபெற்றது.

இந்த விழாவுக்காக அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு கோவிலில் அமைக்கப்பட்டுள்ள யாக சாலையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து சுவாமி கைலாசநாதர்-சவுந்தரவல்லி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் செப்பு கேடயத்தில் எழுந்தருளினர். அவர்களுக்கு மகா தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து கொடி பட்டத்துடன் சுவாமி- அம்பாள் வீதி உலாவும், பின்னர் கொடிமரத்திற்கு பல்வேறு வகையான சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. அதன்பின்னர் பால், தயிர், மஞ்சள், இளநீர் கொண்டு கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடந்தது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 28-ந்தேதியும், அதற்கு மறுநாள் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. கொடியேற்ற திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News