உள்ளூர் செய்திகள்

நெல்லை நகை வியாபாரியை தாக்கி ரூ.1½ கோடி கொள்ளை-கேரள வாலிபர்கள் 2 பேர் சிக்கினர்

Published On 2023-06-08 09:02 GMT   |   Update On 2023-06-08 09:02 GMT
  • டி.எஸ்.பி. ராஜூ தலைமையில் கொள்ளையர்களை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
  • கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை தனிப்படையினர் இன்று மூணாறு பகுதியில் வைத்து சுற்றி வளைத்து பிடித்தனர்.

நெல்லை:

நெல்லை டவுனை சேர்ந்தவர் சுஷாந்த். தொழிலதிபரான இவர் டவுனில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவர் நகைகள் வாங்குவதற்காக கடந்த 30-ந் தேதி உதவியாளர்கள் 2 பேருடன் தனது காரில் கேரளா மாநிலம் நெய்யாற்றங்கரைக்கு புறப்பட்டு சென்றார்.

ரூ.1½ கோடி கொள்ளை

கார் நாங்குநேரி அருகே உள்ள மூன்றடைப்பு அருகே சென்றபோது இவர்களை பின்தொடர்ந்து மற்றொரு காரில் வந்த மர்ம நபர்கள் வழிமறித்து மிளகாய் பொடி தூவி தாக்கி விட்டு அவர்களிடம் இருந்த ரூ.1½ கோடியை கொள்ளையடித்து சென்றனர்.

இதுதொடர்பாக மூன்றடைப்பு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு ) செல்வி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நாங்குநேரி டி.எஸ்.பி. ராஜூ தலைமையில் கொள்ளையர்களை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதில் 4 தனிப்படையினர் கேரள மாநிலம் திருவனந்தபுரம், மூணாறு, நெய்யாற்றங்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொள்ளையர்களை தேடி வந்தனர்.

2 பேர் சிக்கினர்

இந்நிலையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை தனிப்படையினர் இன்று மூணாறு பகுதியில் வைத்து சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர்கள் கேரளாவை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களிடம் கொள்ளை சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? அவர்கள் எங்கு பதுங்கி உள்ளனர்? கொள்ளையடிக்கப்பட்ட பணம் யாரிடம் உள்ளது? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News