உள்ளூர் செய்திகள்

இன்று நடைபெற இருந்த நெல்லை மாநகராட்சி கூட்டம் 'திடீர்' ஒத்திவைப்பு

Published On 2022-10-20 09:37 GMT   |   Update On 2022-10-20 09:37 GMT
  • நெல்லை மாநகராட்சியின் அவசரக் கூட்டம் மாநகராட்சி வளாகத்தில் உள்ள ராஜாஜி மண்டபத்தில் வைத்து இன்று நடைபெறும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது
  • அ.தி.மு.க. கவுன்சிலர்களை தகுதி நீக்கம் செய்வதற்கு மதுரை ஐகோர்ட்டு தடை விதித்திருந்தது.

நெல்லை:

நெல்லை மாநகராட்சியின் சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் மாநகராட்சி வளாகத்தில் உள்ள ராஜாஜி மண்டபத்தில் வைத்து இன்று நடைபெறும் என மாநகராட்சி மேயர் சரவணன் தரப்பில் அனைத்து மாமன்ற உறுப்பினர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப் பட்டிருந்தது.

தகுதி நீக்க தீர்மானத்துக்கு தடை

இந்த கூட்டத்தில் தொடர்ந்து 3 கூட்டங்களுக்கு மேல் பங்கேற்காத முன்னாள் துணை மேயர் ஜெகநாதன் என்ற கணேசன் மற்றும் அ.தி.மு.க கவுன்சிலர் முத்துலட்சுமி ஆகியோர் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஜெகநாதன் மற்றும் முத்துலட்சுமி தரப்பில் மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் இன்று நடக்கும் கூட்டத்தின் போது அ.தி.மு.க. கவுன்சிலர்களை தகுதி நீக்கம் செய்வதற்கு மதுரை ஐகோர்ட்டு தடை விதித்திருந்தது.

கூட்டம் ஒத்திவைப்பு

இதற்கிடையே இன்று காலை 10.30 மணிக்கு கூட்டம் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் திடீரென 10 மணிக்கு கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக மாநகராட்சி மேயர் அறிவிப்பு வெளியிட்டார். இதனால் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்கள் குழப்பம் அடைந்தனர். இதை எடுத்து மேயர் தரப்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், தி.மு.க. வழக்கறிஞர் பிரபாகரன் என்பவர் இறந்துவிட்டதாகவும், இதனால் அதில் பங்கேற்க வேண்டும் என்று பெரும்பான்மையான தி.மு.க. கவுன்சிலர்கள் தெரிவித்ததாகவும் அதன் அடிப்படையில் மாநகராட்சி கூட்டம் இன்று ஒத்திவைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது மேலும் கூட்டம் வருகிற 28-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என அதில் கூறப்பட்டிருந்தது.

Tags:    

Similar News