உள்ளூர் செய்திகள்

28-ந் தேதி நெல்லை மாநகராட்சி கூட்டம்-மேயர் தலைமையில் நடக்கிறது

Published On 2023-02-23 09:56 GMT   |   Update On 2023-02-23 09:56 GMT
  • நெல்லை மாநகராட்சி கூட்டம் வருகிற 28-ந் தேதி மாநகராட்சி மைய அலுவலக ராஜாஜி மண்ட பத்தில் மேயர் சரவணன் தலைமையில் நடைபெற உள்ளது.
  • துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

நெல்லை:

நெல்லை மாநகராட்சி கூட்டம் வருகிற 28-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மதியம் 12 மணியளவில் மாநகராட்சி மைய அலுவலக ராஜாஜி மண்ட பத்தில் மேயர் சரவணன் தலைமையில் நடைபெற உள்ளது.

கூட்டத்திற்கு துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

தீர்மானங்கள்

கூட்டத்தில் நெல்லை மாநகராட்சி பகுதிகளில் மாநகராட்சிக்கு சொந்த மான காலி இடங்களில் வேளாண்மை விற்பனை குழு மூலமாக நடைபெற்று வரும் உழவர் சந்தைக்கு நகராட்சி நிர்வாக இயக்குனரால் ஆண்டு வாடகையாக ரூ.25 ஆயிரம் மட்டும் நிர்ணயம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

மேலும் பாளை மண்டலம் 8-வது வார்டு சக்தி நகரில் தூய்மை இந்தியா இயக்க திட்டத்தின் கீழ் பொது கழிப்பிடம் அமைக்கும் பணியினை ரூ.36.28 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டதில் போதுமான இடவசதி இல்லாததினால் இந்த பொது கழிப்பிடத்தை அதே வார்டில் உள்ள மாற்று இடமான கனநாத நாயனார் தெருவில் உபயோகமற்ற நிலையில் உள்ள மிகவும் பழுதடைந்த பழைய பொது கழிப்பிடத்தை இடித்து விட்டு அந்த இடத்தில் கட்டுவதற்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

Tags:    

Similar News