தியாகதுருகம் அருகே கார் மோதி விவசாயி சாவு
- தியாகதுருகம் அருகே கார் மோதி விவசாயி பலியானார்.
- கள்ளக்குறிச்சி அருகே தென்னேரிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 64) விவசாயி.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அருகே தென்னேரிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 64) விவசாயி, இவர் நேற்று சொந்த வேலை காரணமாக எலவனாசூர்கோட்டை க்கு சென்றார். வேலை முடித்துவிட்டு மீண்டும் ஊருக்கு தனது மொபட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது திம்மலை பஸ் நிறுத்தம் அருகே சாலையை கடந்த போது அவருக்கு பின்னால் சென்னையில் இருந்து கோவை நோக்கி சென்ற கார் இவரது மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட வெங்கடேசன் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்து போனார். மேலும் கார் சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதி சாலையோர பள்ளத்தில் இறங்கியது. காரில் வந்தவர்கள் காயமின்றி தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த தியாகதுருகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வெங்கடேசன் மனைவி கஸ்தூரி கொடுத்த புகாரின் பேரில் கார் டிரைவர் கோவை வடமதுரை பகுதியைச் சேர்ந்த குணசேகரன் மகள் பிரியதர்ஷினி (29) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.