உள்ளூர் செய்திகள்

போச்சம்பள்ளி அருகே இருசக்கர வாகனம் திருடிய வாலிபருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

Published On 2022-06-20 15:33 IST   |   Update On 2022-06-20 15:33:00 IST
  • பைக் திருடிய வாலிபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
  • அவரிடம் இருந்து பைக் மற்றும் 10 ஆயிரம் மதிப்பு வயர்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

மத்தூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்துள்ள பாலேதோட்டம் பகுதியில் இருசக்கர வாகனம், மின்மோட்டார் வயர்கள் ஆகியவை அடிக்கடி திருடு போனது. இது பற்றி பொதுமக்கள் போலீசில் புகார் கொடுத்தனர். பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்று திருடனை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் இருந்தனர்.

இந்த நிலையில் நேற்றிரவு அதே பகுதியில் மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தை திருடி கொண்டிருந்தார். இதனை பார்த்த ஒருவர் ஓடி வந்து அந்த நபரை பிடித்தார்.

பின்னர் அவர் கூச்சலிட்டதால் அருகில் இருந்த பொதுமக்கள் வந்து திருடனை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவரிடம் இருந்து பைக் மற்றும் 10 ஆயிரம் மதிப்பு வயர்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து அந்த திருடனை பிடித்து போச்சம்பள்ளி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் கருடனூர் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (வயது28) என்பது தெரியவந்தது. மேலும் அவர் அந்த பகுதியில் இருசக்கர வாகனம் மற்றும் விலையுயர்ந்த மின்மோட்டார் வயர்களை திருடியது தெரியவந்தது.

இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர். கைதான அவரை ஊத்தங்கரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.

Similar News