பாலக்கோடு அருகே பூர்காலன்கொட்டாய் கிராமத்தில் பழுதான சாலையால் பொதுமக்கள் அவதி
- சாலை முழுவதும் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது.
- அவ்வழியாக செல்லும் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள், விவசாயிகள், வாகன ஓட்டிகள் என தினந்தோறும் பெரும் சிரமம் அடைந்துள்ளனர்.
பாலக்கோடு,
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்துக்கு உட்பட்ட கரகதஹள்ளி ஊராட்சி பூர்காலன்கொட்டாய் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்.
இக்கிராமத்திற்கு செல்லும் தார் சாலை குண்டும் குழியுமாக உள்ளதாக கூறி கடந்த 1 வருடத்திற்கு முன்பு கரகதஹள்ளி கிராமத்திலிருந்து பூர்காலன்கொட்டாய் கிராமம் வரை உள்ள சுமார் 2 கி.மீ. தூரத்திற்கு பழைய தார்சாலையை அகற்றிவிட்டு புதிய தார் சாலை அமைப்பதற்கான பணிகள் துவங்கின.
ஆனால் ஓராண்டு கடந்தும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் தார் சாலை முழுவதும் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளதால் அவ்வழியாக செல்லும் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள், விவசாயிகள், வாகன ஓட்டிகள் என தினந்தோறும் பெரும் சிரமம் அடைந்து வருவதாகவும், அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு படுகாயம் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாக சாலையை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.