உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி அருகே மின்சாரம் பாய்ந்து கள்ளக்காதலியுடன் உயிரிழந்த வாலிபர்

Published On 2022-07-31 14:53 IST   |   Update On 2022-07-31 14:53:00 IST
  • ஷெட்டில் தசரதன், அவரது கள்ளக்காதலி சத்யா ஆகியோர் பிணமாக கிடந்தனர்.
  • சமூக விரோதிகளுக்கு வைக்கப்பட்ட பொறியில் சிக்கி பலியான பரிதாபம்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அருகே உள்ள சுபேதார்மேட்டை சேர்ந்தவர் தசரதன் (வயது 26). இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

அதே ஊரை சேர்ந்த பெண்சத்யா (25). இவருக்கு சூளகிரி அருகே பி.ஜி.துர்க்கத்தில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். தசரதன் ,சத்யா இடையே பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சத்யாவின் அண்ணன் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று வருவதாக கூறி, தனது ஒன்றரை வயது குழந்தையுடன் அவர் சுபேதார்மேடு பகுதிக்கு நேற்று முன்தினம் வந்தார்.

பின்னர் தசரதன், சத்யாவுடன் எம்.சி.பள்ளி அருகில் உள்ள தனது விவசாய நிலத்திற்கு சென்றார்.

அப்போது சத்யா குழந்தையை அழைத்து சென்றார். அந்த நிலத்தில் உள்ள இரும்பு ஷெட்டில் தசரதன், தனது கள்ளக்காதலி சத்யாவுடன் இரவில் இருந்தார். அந்த நேரம் சத்யா குழந்தையை அந்த ஷெட்டில் தொட்டில் கட்டி போட்டிருந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை அந்த வழியாக சிலர் மாடு மேய்க்க சென்றனர். அப்போது குழந்தையின் அழுகுரல் கேட்டு அவர்கள் அந்த ஷெட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது ஷெட்டில் தசரதன், அவரது கள்ளக்காதலி சத்யா ஆகியோர் பிணமாக கிடந்தனர்.

இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் மகராஜகடை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழரசி மற்றும் மகராஜகடை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அவர்கள் தசரதன், சத்யா ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் மின்சாரம் தாக்கி அவர்கள் இறந்ததாக தெரிய வந்துள்ளது.

அந்த இரும்பு ஷெட்டில் இரவு நேரத்தில் சிலர் வந்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும், அதன் காரணமாக அங்கு யாரும் வராமல் இருக்க ஷெட்டை சுற்றி மின்சாரம் கொடுக்கப்பட்டு இருந்ததாகவும், அதில் அவர்கள் இறந்ததாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

Similar News