உள்ளூர் செய்திகள்

மலைக்கோட்டாலம் பெரிய ஏரியில் கிராவல் மண் அள்ளப்பட்ட பள்ளத்தை படத்தில் காணலாம்.

கள்ளக்குறிச்சி அருகே மலைக்கோட்டாலம் ஏரியில் மண் கொள்ளை

Published On 2022-08-15 07:14 GMT   |   Update On 2022-08-15 07:14 GMT
  • ஏரிகளில் படிந்துள்ள வண்டல் மண் மற்றும் களிமண் ஆகியவற்றை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம் என கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
  • சமூக விரோதிகள் திருட்டுத்தனமாக எடுத்துச்சென்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்து ள்ளதாக கூறப்படுகிறது.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களை செம்மைப்படுத்தவும் மற்றும் பொதுமக்களின் இதர பயன்பாட்டிற்காக தங்களது கிராமம் அல்லது அருகாமையில் உள்ள கிராமங்களில் அமைந்துள்ள பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் படிந்துள்ள வண்டல் மண் மற்றும் களிமண் ஆகியவற்றை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம் என கடந்த ஜூன் மாதம் 23-ந்தேதி மாவட்ட கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

அதில் விவசாயிகள் நஞ்சை நிலத்திற்கு ஏக்கர் ஒன்றுக்கு 25 டிராக்டர் லோடுகளும், புஞ்சை நிலத்திற்கு ஏக்கர் ஒன்றுக்கு 30 டிராக்டர் ரோடுகளும், வீட்டு பயன்பாட்டிற்கு 10 டிராக்டர் லோடுகளும், மண்பாண்டம் தொழில் செய்ய 20 டிராக்டர் லோடு அளவிற்கு இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை விலை இல்லாமல் பெற்று பயன் அடையலாம் என கூறப்பட்டது. மேலும் இவ்வாறு மண் அடிக்கும் விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலரிடம் சிட்டா அடங்கள் ஆகியவற்றுடன் விண்ணப்பித்து வருவாய் ஆய்வாளர் பரிந்துரையின் பேரில் வருவாய் கோட்டா ட்சியரிடம் அனுமதி பெற்று மண் அடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கள்ளக்குறிச்சி அருகே மலைக்கோட்டாலத்தில் சுமார் 500 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் வண்டல் மண் அடிக்க ஒரே ஒரு விவசாயி மட்டுமே அனுமதி பெற்றுள்ளார். ஆனால் சமூக விரோதிகள் பொக்லைன் எந்திரம் மூலம் லாரிகளில் இரவு நேரங்களில் வருவாய்துறையினரிடம் அனுமதி பெறாமல் திருட்டுத்தனமாக கிராவல் மண் அடித்து வருகின்றனர். இவ்வாறு கிராவல் மண் அள்ளும் சமூக விரோதிகள் ஏரி பகுதியில் ஊருக்கு அருகே உள்ள பகுதியில் அதிக ஆழமாக அள்ளுவதாகவும், இவ்வாறு கிராவல் மண் அள்ளுவதால் மழை காலங்களில் குழந்தைகள் தண்ணீரில் மூழ்க வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர். மேலும் சமூக விரோதிகள் கிராவல் மண்ணை கள்ளக்குறிச்சி, உலகங்காத்தான், தச்சூர் ஆகிய பகுதிக்கு எடுத்து ச்சென்று விற்பனை செய்வதாகவும், மலைக்கோட்டாலம், விளம்பாவூர் பகுதியை சேர்ந்த சிலர் செங்க ல்சூலைக்கு அனுமதியின்றி வண்டல் மண் அள்ளிச் செல்வதாகவும் கூறப்படுகிறது. மேலும் இவ்வாறு ஏரியில் அனுமதியின்றி 1000- க்கும் மேற்பட்ட நடை கிராவல் மண் மற்றும் வண்டல் மண்ணை சமூக விரோதிகள் திருட்டுத்தனமாக எடுத்துச்சென்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்து ள்ளதாக கூறப்படுகிறது.

இவ்வாறு ஏரியில் சுமார் 10 அடி ஆழம் வரை மண் எடுப்பதாலும், ஏரியில் பல்வேறு இடங்களில் மண் எடுப்பதாலும் ஆடு, மாடுகளை கூட ஏரியில் மேய்க்க முடியாமலும், ஆடு மாடுகள் வந்து செல்லக்கூட வழி இல்லாமல் அவதிப்படுவதாகவும், ஏரியின் அமைப்பு உருக்குலைந்து காணப்படு வதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மேலும் சமூக விரோதிகள் அனுமதியின்றி மண் எடுப்பதற்கு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதாகவும், இதனால் அதிகாரிகள் சமூக விரோதிகள் மண் அடிப்பதை கண்டு கொள்வதில்லை என அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். இவ்வாறு பெரிய ஏரியில் மணல் கொள்ளை தொடர்ந்தால் அப்பகுதி மக்கள் மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு அளிக்க உள்ளதாகவும் கூறுகின்றனர்.

எனவே மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் நேரில் சென்று ஆய்வு செய்து இதுவரை எத்தனை பேர் வண்டல் மண் அடிக்க அனுமதி பெற்றுள்ளனர், இந்த ஏரியில் இருந்து மண் வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு செல்கிறதா? ஏரியில் எவ்வளவு மண் அள்ளப்பட்டுள்ளது. இந்த ஏரியில் மண் அள்ளும் பள்ளத்தால் குழந்தைகள் மற்றும் ஆடு, மாடு மேய்ப்பவர்களுக்கு பாதிப்பு உள்ளதா? சமூகவி ரோதிகள் திருட்டுத்தனமாக மண் அள்ள அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துள்ளனரா? என்பது குறித்து விசாரணை செய்தால் மட்டுமே உண்மை வெளிவரும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags:    

Similar News