பரமத்திவேலூர் அருகே ஆயில் மில் மேலாளருக்கு அரிவாள் வெட்டு
- மில்லில் பரமத்திவேலூர் அருகே வடுகபாளையத்தை சேர்ந்த ராஜேந்தி ரன் கடந்த 5 ஆண்டாக வாடிக்கையாளராக உள்ளார்.
- ஆத்திரமடைந்த ராஜேந்திரன் பிரேம்குமாரின் தலையில் அரிவாளால் வெட்டினார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே பாப்பிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார் (26). இவர் புல்லாகவுண்டம்பட்டியில் செயல்பட்டு வரும் தனியார் ஆயில் மில்லில் மேலாளராக உள்ளார். இந்த மில்லில் பரமத்திவேலூர் அருகே வடுகபாளையத்தை சேர்ந்த ராஜேந்தி ரன் கடந்த 5 ஆண்டாக வாடிக்கையாளராக உள்ளார். இதனால் மில்லில் வரவு, செலவு கணக்கு வைத்திருந்தார்.
இந்நிலையில் ராஜேந்திரன் பாக்கி கணக்கில் ரூ.12 ஆயிரம் கடனாக எழுதப்பட்டு இருந்தது. இதுகுறித்து அறிந்த ராஜேந்திரன் ஆயில் மில்லுக்கு வந்து, தகாத வார்த்தைகளால் மேலாளர் பிரேம்குமாரை திட்டி உள்ளார்.
அரிவாள் வெட்டு
இந்த நிலையில் பணி முடித்துவிட்டு பிரேம்குமார் ராஜேந்திரனின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராஜேந்திரன் பிரேம்குமாரின் தலையில் அரிவாளால் வெட்டினார்.
இதில் பலத்த காயமடைந்த பிரேம்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருச்செங்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து பிரேம்குமார் வேலகவுண்டம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்து நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.