உள்ளூர் செய்திகள்

ஓடும் பஸ்சில் சுற்றுலா பயணிகளுக்கு கத்திக்குத்து

Published On 2022-06-07 09:55 GMT   |   Update On 2022-06-07 09:55 GMT
  • ஓடும் பஸ்சில் பதட்டமான சூழல் நிலவியது. டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தினார்.
  • இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்கள் 3 பேரையும் தேடி வருகின்றனர்.

நாகப்பட்டினம்:

சென்னை புளியந்தோப்பை சேர்ந்த மணிரத்தினம், பரமகுரு உள்பட 15 பேர் நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்தனர்.

வேளாங்கண்ணியை சுற்றிப் பார்த்துவிட்டு இரவு அக்கரைப்பேட்டை வழியே நாகை செல்லும் அரசு டவுன் பஸ்சில் ஏறினர். அப்போது டிக்கெட்டை கண்டக்டர் தூக்கி வீசியதாக கூறப்படுகிறது.

டிக்கெட்டை ஏன் தூக்கி வீசுகிறீர்கள் என மணிரத்தினம், பரமகுரு மற்றும் அவருடன் வந்தவர்கள் தட்டி கேட்டனர். இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மணிரத்தினம் தரப்பினர் கண்டக்டரை தாக்கியதாக தெரிகிறது.

இதை பார்த்த பஸ்சில் இருந்த 3 மர்ம நபர்கள் திடீரென மணிரத்தினம், பரமகுருவை கத்தியால் குத்தினர்.

இதனால் ஓடும் பஸ்சில் பதட்டமான சூழல் நிலவியது. டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தினார். தொடர்ந்து மற்ற பயணிகள் பஸ்சில் இருந்து இறங்கி அலறியடித்து கொண்டு ஓடினர்.

இது குறித்து தகவல் அறிந்த வேளாங்கண்ணி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தாக்குதலில் காயமடைந்த 2 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்கள் 3 பேரையும் தேடி வருகின்றனர். ஓடும் பஸ்சில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News