உள்ளூர் செய்திகள்

ஆத்தூரில் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 3½ லட்சம் ரொக்கம், 45 பவுன் நகை கொள்ளை

Published On 2025-04-14 22:25 IST   |   Update On 2025-04-14 22:25:00 IST
  • வீட்டில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களையும் மர்ம நபர்கள் உடைத்து சென்றுள்ளனர்.
  • விவசாயி வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆத்தூர்:

சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட 7-வது வார்டு உப்போடை பகுதியில் வசிப்பவர் பழனிவேல். விவசாயி. இவரது மனைவி கடந்த சில நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

இந்த நிலையில் பழனிேவல் இரவு நேரத்தில் தனது விவசாய தோட்டத்தில் தங்கி விட்டு காலையில் வீடு திரும்புவது வழக்கம்.

வழக்கம்போல்  வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் பீரோவில் இருந்த ரூ.3½ லட்சம் ரொக்கம், 45 பவுன் நகை, வெள்ளி டம்ளர், குத்து விளக்கு உள்ளிட்ட 1 கிலோ வெள்ளி ஆகியவை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இது குறித்து ஆத்தூர் நகர போலீசில் பழனிவேல் தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் ஆத்தூர் நகர போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் ஆத்தூர் துணைபோலீஸ் சூப்பிரண்டு சதீஷ்குமார் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறார். வீட்டில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களையும் மர்ம நபர்கள் உடைத்து சென்றுள்ளனர். சேலத்தில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயி வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News