உள்ளூர் செய்திகள்

மிரட்டல் புகார்- எம்.பி. திருச்சி சிவாவின் மகன் கைது

Published On 2022-06-23 13:13 GMT   |   Update On 2022-06-23 13:13 GMT
  • சூர்யா கைது செய்யப்பட்டதால் பாஜகவினர் காவல்நிலையம் முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • விபத்தை ஏற்படுத்தியவர் மீது வழக்கு பதிவு செய்யாமல் சூர்யா மீது வழக்குபதிவு செய்யப்பட்டிருப்பதாக பாஜகவினர் குற்றச்சாட்டு

திருச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் பகுதியில் கடந்த 11ம் தேதி நடந்த விபத்து தொடர்பாக, பாஜகவின் ஓபிசி பிரிவு செயலாளரும், திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகனுமான சூர்யா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த விபத்து தொடர்பாக போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று சூர்யா குற்றம்சாட்டினார்.

திருச்சியில் இன்று பேட்டி அளித்த சூர்யா, விபத்து ஏற்படுத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யாமல் என் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். என்னை கைது செய்ய நடவடிக்கை எடுக்கிறார்கள், என்றார்.

அவர் பேட்டி அளித்த சிறிது நேரத்தில் சூரியாவை கன்டோன்மென்ட் காவல்நிலையத்திற்கு போலீசார் அழைத்துச் சென்று விசாரித்தனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்த பாஜகவினர் அங்கு திரண்டு வந்து காவல்நிலையம் முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.

விபத்து நடந்து 15 நாட்களுக்கு மேல் ஆகிறது. விபத்தை ஏற்படுத்தியவர் மீது தவறு உள்ள நிலையில், சூர்யா மீது வழக்குபதிவு செய்யப்பட்டிருப்பதாக பாஜகவினர் குற்றம்சாட்டி உள்ளனர்.

ஆனால், தனியார் பேருந்து மோதியதில் தனது கார் சேதமடைந்ததாக கூறி சூர்யா நஷ்ட ஈடு கேட்டு மிரட்டியதாகவும், நஷ்ட ஈடு வழங்க மறுத்ததால் அந்த பேருந்தை சூரியா எடுத்து வந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் சூரியாவை கைது செய்ததாக காவல்நிலையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்புதான் சூரியா பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News