உள்ளூர் செய்திகள்

ஏரியூர் அருகே மர்ம நபர்கள் வைத்த நாட்டு வெடிகுண்டு வெடித்து பசு மாடு படுகாயம்

Published On 2025-01-26 16:00 IST   |   Update On 2025-01-26 16:01:00 IST
  • மர்ம நபர்கள் சிலர் நாட்டு வெடிகுண்டு பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
  • மற்ற மாடுகள் வெடி சத்தத்தால் சிதறி ஓடி உள்ளது.

ஏரியூர்:

ஏரியூர் அருகே உள்ள மஞ்சார அள்ளி ஊராட்சிக்குட்பட்ட கவுண்டனூரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (48). விவசாயி இவருக்கு வளர்மதி என்ற மனைவியும் உள்ளார்.

இவர்கள் ஊருக்கு ஒதுக்குப்புறமாக வனப்பகுதியையொட்டி உள்ள பகுதியில், குத்தகைக்கு விவசாயம் செய்து வருகின்றனர்.

மேலும் 10 பசு மாடுகளை வைத்து பால் கறந்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

இவர்கள் தங்களது விவசாய நிலம் அருகில், உள்ள வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் ஆடு மற்றும் மாடுகளை மேய்த்து வருவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பினர். மேச்சலுக்குச் சென்ற மாடுகள் சென்ற பகுதியில் இருந்து திடீரென பயங்கர வெடி சத்தம் கேட்டுள்ளது் மாடுகள் அலறி கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடி உள்ளது. இதனை கண்ட விவசாயி கோவிந்தராஜ், வெடிச்சத்தம் கேட்ட பகுதிக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது ஒரு பசு மாட்டின் முகத்தில் வாய் பகுதி சிதறி ரத்த வெள்ளத்தில் படுகாயத்துடன் விழுந்து கிடந்துள்ளது.

அந்த இடத்தில் நாட்டு வெடிகுண்டு இருந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளது. அப்பகுதியில், மர்ம நபர்கள் சிலர் நாட்டு வெடிகுண்டு பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

அதனை அறியாமல், அந்தப் பகுதிக்கு மேய்ச்சலுக்குச் சென்ற மாடு நாட்டு வெடிகுண்டை கடித்ததால் முகம் சிதறி படுகாயம் அடைந்தது தெரிய வந்துள்ளது. மற்ற மாடுகள் வெடி சத்தத்தால் சிதறி ஓடி உள்ளது. ஒரு மாடு, முழுமையாக முகம் சிதறி, பற்கள் ஆங்காங்கே சிதறி கிடந்ததைக் கண்டு கோவிந்தராஜூம், அவரது மனைவி வளர்மதியும், கதறி அழுதனர்.

இதுகுறித்து கோவிந்தராஜ் ஏரியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார்

வனப்பகுதியில் உள்ள காட்டுப்பன்றிகளை வேட்டையாட வைத்த நாட்டு வெடிகுண்டா? அல்லது வேறு ஏதேனும் சமூகவிரோத செயல்களில் ஈடுபட, மர்ம நபர்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இதே விவசாயி வளர்த்து வந்த 21 ஆடுகளை மர்ம விலங்கு கடித்து பலியாகி உள்ளது. அதற்கான எவ்வித நிவாரணமும் கிடைக்காமல், அந்த பாதிப்பில் இருந்து விடுபடாமல் இருந்த விவசாயிக்கு, மீண்டும் நாட்டு வெடி குண்டுக்கு ஒரு மாடு இறக்கும் தருவாயில் உள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாட்டு வெடிகுண்டு வெடித்து, பசு மாடு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் செய்தி, ஏரியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News