பரமத்திவேலூர் அருகே மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பெரியகரசப்பாளையத்தை சேர்ந்தவர் சிவகுமார். இவரது மகன் அருண் ( வயது 27) கூலி தொழிலாளி.
இந்த நிலையில் அருண்குமாரும், அவரது மனைவி ஐஸ்வர்யாவும் நேற்று முன்தினம் பரமத்திவேலூர் வந்துள்ளனர். பின்னர் மீண்டும் வீட்டுக்கு செல்ல மோட்டார் சைக்கிளில் பொய்யேரி அருகே ஒழுகூர்பட்டி பிரிவு சாலையில் திரும்ப முயன்றுள்ளனர். அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார்சைக்கிள் அருணின் மோட்டார்சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் அருண் தலையில் பலத்த அடிபட்டு படுகாயம் அடைந்தார். இதனை கண்டு அவரது மனைவி கதறி அழுதார். சிறிது நேரத்திலேயே அருண் பரிதாபமாக இறந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அருண் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து வந்த அவரது மனைவி ஐஸ்வர்யா அதிஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர்தப்பினர். எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்து மோதிய கரூர் மாவட்டம், வாங்கல் பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் தேவராஜ் (27) காயம் அடைந்தார். இவர் நாமக்கல்லில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.