உள்ளூர் செய்திகள்

108 ஆம்புலன்ஸ் மூலம் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பயன் பெற்றுள்ளனர்

Published On 2022-10-11 10:20 GMT   |   Update On 2022-10-11 10:20 GMT
  • நாகப்பட்டினம் மாவட்டத்தில் மொத்தம் 18 எண்ணிக்கையில் 108 ஆம்புலன்ஸ் அவசர ஊர்திகள் இயக்கப்பட்டு வருகிறது.
  • அதி நவீன வசதிகள் கொண்ட ஆம்புலன்ஸ்களும் ஒரு பச்சிளம் குழந்தைகளுக்கு உண்டான ஆம்புலன்ஸ் இயக்கப்பட்டு வருகிறது.

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் மூலம் 3 லட்சத்துக்கும் மேலானவர்கள் பயன்பெற்றுள்ளனர் என்று 108 ஆம்புலன்ஸ் மேலாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது, 2008ம் ஆண்டு தமிழக மக்களின் அவசர மருத்துவ பயன்பாட்டிற்காக தொடங்கப்பட்ட 108 ஆம்புலன்ஸ் சேவையானது பொதுமக்களின் பயன்பாட்டுக்கு ஏற்றபடி படிப்படியாக ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கையை உயர்த்தி தற்போது தமிழகம் முழுவதும் 1353 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது

இதில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மொத்தம் 18 எண்ணிக்கையில் 108 ஆம்புலன்ஸ் அவசர ஊர்திகள் இயக்கப்பட்டு வருகிறது.

இதில் அடிப்படை உயிர் காக்கும் கருவிகள் கொண்ட ஆம்புலன்ஸ்கள் 15, 2 அதி நவீன உயிர்க்காக்கும் வசதிகள் கொண்ட ஆம்புலன்ஸ்களும் ஒரு பச்சிளம் குழந்தைகளுக்கு உண்டான ஆம்புலன்ஸ் இயக்கப்பட்டு வருகிறது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சேவை துவக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை மொத்தம் 3 லட்சத்து 1132 பயன்பெற்றுள்ளனர் இதில் பிரசவ தேவைக்காக மட்டும் 64,539 பேரும், சாலை விபத்துகளில் 50,761 பேரும் இதர மருத்துவ அவசர தேவைக்காக 1,85,732, பேரும் சேவையை பயன்படுத்தி உள்ளனர்.

இதில் முக்கியமாக பிரசவத்திற்காக அழைக்கப்பட்டவர்களில் 435 தாய்மார்களுக்கு அவசர மருத்துவ உதவியாளரின் துரித நடவடிக்கையால் அவசர ஊர்தியிலேயே பிரசவத்துள்ளனர். மேலும் பிரசவ அவசர அழைப்புக்காக அழைக்கப்பட்டவர்களில் அவசர மருத்துவ உதவியுடன் 370 தாய்மார்கள் அவர்களது இல்லங்களிலேயே சேய் ஈன்றெடுத்துள்ளனர். பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவ்வாறு நாகப்பட்டினம் மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 3 லட்சத்து ஆயிரத்து 132 பேர் பயன்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News