உள்ளூர் செய்திகள்

மேட்டுப்பாளையம், காரமடையில் அடிப்படை வசதிகள் கேட்டு 200-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலைமறியல்

Published On 2023-07-26 14:35 IST   |   Update On 2023-07-26 14:35:00 IST
  • மறியலில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
  • போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையம் நகராட்சியில் மொத்தமாக 33 வார்டுகள் உள்ளன.

இதில் 29-வது வார்டுக்குட்பட்ட ஸ்ரீ சபரி பாலாஜி நகர் பகுதியில் குடிநீர், சாக்கடை, தார் சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முறையாக சரி செய்து தரக்கோரி அப்பகுதி பொதுமக்கள் மேட்டுப்பாளையம் நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்துள்ளனர்.

ஆனால் இதுவரை நகராட்சி தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சுமார் 100 க்கும் மேற்பட்டோர் இன்று காலை மேட்டுப்பாளையம்- குரும்பனூர் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் குறித்து அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம், நகராட்சி பொறியாளர் சுகந்தி மற்றும் அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இருப்பினும் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை சாலை மறியலை கைவிட மறுத்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நகராட்சி அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் விரைவில் அப்பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

இதனை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

காரமடை நகராட்சி 16-வது வார்டில் குளத்துப்பாளையம், முல்லை நகர் கொண்டசாமி நகர், பயணீர் காலணி ஆகிய பகுதிகளில் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.

இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்தல், குப்பைகளை சேகரித்தல், குடிநீர் தொட்டியை சீரமைத்து புதுப்பித்தல், உப்பு தண்ணி குழாய்கள் புதுப்பித்தல், பொது சுகாதார வளாகத்தை சீரமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்பட பல்வேறு கோரிக்ைகைகளை வலியுறுத்தி கேட்டு 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காரமடை சிறுமுகை சாலையில் குளத்துப்பாளையத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காரமடை இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

பிரச்சினைகளுக்கு உட னடியாக தீர்வு ஏற்படுத்தி தருவதாக கூறியதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் காரமடை- சிறுமுகை சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News