உள்ளூர் செய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் சிறப்பு வாழ்த்தரங்கம்- அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடக்கிறது

Published On 2023-03-05 08:36 GMT   |   Update On 2023-03-05 08:36 GMT
  • அருள்முருகன் டவர்ஸ் திருமண மண்டபத்தில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெறுகிறது.
  • நிகழ்ச்சியில் மாவட்டக் கழக துணைச் செயலாளர் இ.கருணாநிதி எம்.எல்.ஏ. வரவேற்று பேசுகிறார்.

சென்னை:

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாள் விழாவையொட்டி சிறப்பு வாழ்த்தரங்கம் நாளை (6-ந்தேதி) மாலை 5 மணிக்கு பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள அருள்முருகன் டவர்ஸ் திருமண மண்டபத்தில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெறுகிறது.

நிகழ்ச்சியில் மாவட்டக் கழக துணைச் செயலாளர் இ.கருணாநிதி எம்.எல்.ஏ. வரவேற்று பேசுகிறார். பாராளுமன்ற குழுத் தலைவர் கழக பொருளாளர் டி.ஆர்.பாலு தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார்.

'எந்த பந்தயத்திலும் முந்தி வரும் முதல்வர்' என்ற பொதுத் தலைப்பில் சிறப்பு பேச்சாளர்கள் புலவர் இராமலிங்கம் இளைஞர் எழுச்சியாளர் என்ற தலைப்பிலும், டாக்டர் சுதந்திர ஆவுடையப்பன் தமிழின மீட்சியாளர் என்ற தலைப்பிலும், பேராசிரியர் அருள் பிரகாஷ் திராவிட மாடல் ஆட்சியாளர் என்ற தலைப்பிலும், திருச்சி அன்னலட்சுமி மகளிர் முன்னேற்ற மாட்சியாளர் என்ற தலைப்பிலும் உரையாற்ற உள்ளனர்.

நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செல்வம் எம்.பி., மீ.ஆ.வைத்திலிங்கம், தமிழ்மணி, மாவட்ட ஊராட்சித் தலைவர் படப்பை மனோகரன் உள்பட கட்சியின் அனைத்து பிரமுகர்களும் பங்கேற்கிறார்கள்.காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நடைபெற உள்ள இந்த வாழ்த்தரங்க நிகழ்ச்சியில் மாவட்டம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான நிர்வாகிகள் கழக செயல் வீரர்கள் பங்கேற்று சிறப்பிக் கும்படி மாவட்டச் செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

Tags:    

Similar News