உள்ளூர் செய்திகள்

பால் உற்பத்தியாளர்கள் எந்தவித இடையூறும் இல்லாமல் பால் வழங்குகிறார்கள்- அமைச்சர் நாசர்

Published On 2023-04-18 10:21 GMT   |   Update On 2023-04-18 10:21 GMT
  • பால் உற்பத்தியாளர்கள் லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 7 உயர்த்தி வழங்க கோரிக்கை வைத்துள்ளனர்.
  • தனியார் நிறுவனங்களை போல் அல்லாமல் ஆவின் வருடம் முழுவதும் ஒரே சீரான பால் கொள்முதல் விலை வழங்குகிறது.

சென்னை:

சட்டசபையில் இன்று பால் வளத்துறை அமைச்சர் நாசர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் கிராமப்புற பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் நலனை கருத்தில் கொண்டு பால் கொள்முதல் விலையை பசும்பால் மற்றும் எருமை பால் ஆகியவற்றிற்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 கடந்த 05.11.2022 அன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது.

பசும் பால் லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 35 மற்றும் எருமைப்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 44 ஆக பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

பாலின் தரத்தை உயர்த்தவும் தரமான பால் உற்பத்தி செய்ய உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், 4.3 சதவீதம் கொழுப்பு சத்துக்கு மேல் மற்றும் 8.2 சதவீதம் மற்றும் அதற்கு மேல் உள்ள இதர சத்துக்கள் கொண்ட பால் வழங்கும் உற்பத்தியாளர்களுக்கு ஒவ்வொரு 0.1 சதவீதம் கூடுதல் கொழுப்பு சத்திற்கும் மூன்று பைசா கூடுதலாக வழங்கப்படுகிறது.

பால் உற்பத்தியாளர்கள் லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 7 உயர்த்தி வழங்க கோரிக்கை வைத்துள்ளனர். பால் கொள்முதல் விலை உயர்த்தி வழங்குவது அரசின் கொள்கை முடிவாகும்.

அதேபோல், பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தினர் பால் நிறுத்த போராட்டம் அறிவித்ததனால், அனைத்து களப்பணியாளர்களும் பால் உற்பத்தியாளர்களை சந்தித்து, தனியார் நிறுவனங்களை போல் அல்லாமல் ஆவின் வருடம் முழுவதும் ஒரே சீரான பால் கொள்முதல் விலை வழங்குகிறது.

குறைந்த விலையில் கால்நடை தீவனம் மற்றும் தாது உப்பு கலவை வழங்குதல், கால்நடை மருத்துவம் மற்றும் இனவிருத்தி வசதி, கால்நடை காப்பீடு வசதிகள், தீவனப்புல் வளர்க்க நிதி உதவி, போன்ற நலத்திட்டங்கள் பால் உற்பத்தியாளர்களுக்கு ஆவின் மூலம் வழங்கப்படுகிறது. பால் உற்பத்தியாளர்கள் பால் கூட்டுறவு சங்கங்களுக்கு எவ்வித இடையூறும் என்று எப்போதும் போல் தொடர்ந்து பால் வழங்கி வருகின்றனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News