உள்ளூர் செய்திகள்
வடியாத வெள்ளம்: சென்னையில் மெட்ரோ ரெயில் மட்டும் இயக்கம்
- சாலைகளில் குளம் போல் தேங்கி நிற்கும் மழைநீர்.
- தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் ரெயில்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் மிச்சாங் புயல் காரணமாக கனமழை கொட்டித்தீர்த்தது. பலத்த காற்றும் வீசியதால் மரங்கள் சாய்ந்தன. இதனால் பல இடங்களில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
சென்னையில் இருந்து புயல் விலகி சென்றாலும் சாலைகள், தெருக்களில் தேங்கிய நீர் அப்படியே உள்ளது. நீர் வடிய பல மணி நேரம் ஆகலாம். இதனால் அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. அதேபோல் சென்னை புறநகர் மின்சார ரெயில்களும் இயக்கப்படவில்லை.
மெட்ரோ ரெயில்கள் மட்டும் இயக்கப்படுகிறது. வழக்கமான காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் சென்னையில் கட்டயாம் பயணம் செய்ய விரும்புவோர் மெட்ரோ ரெயிலை பயன்படுத்தலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.