தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்ட காட்சி.
தூத்துக்குடி மேலூர் ரெயில் நிலையத்தில் மேயர் ஆய்வு
- ஜெயராஜ் ரோட்டில் அமைந்துள்ள பல அடுக்கு வாகனம் நிறுத்துமிடம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது.
- டூவிபுரம் பகுதியில் நடைபெற்று வரும் வடிகால் அமைக்கும் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு விரைந்து பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சி யில் பணிகள் நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ள மேலூர் ரெயில் நிலையத்தை மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேயர் ஆய்வு
ரெயில் நிலையத்திற்கு எதிரே புதிய பஸ் நிலையம் இருப்பதால் சாலையை அகலப்படுத்துவதற்கும் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது ரெயில்வே பணிகள் நிறைவேற்றதால் அப்பகுதியில் இருக்கும் மண் மற்றும் கற்களை உடனடியாக அகற்றி போக்குவதற்கு இடையூறு இல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். வரும் நாட்களில் புதிய சாலை மற்றும் மின்விளக்குகள் அமைக்க விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்பகுதி பொதுமக்களிடம் மேயர் ஜெகன் உறுதி அளித்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், ஜெயராஜ் ரோட்டில் அமைந்துள்ள பல அடுக்கு வாகனம் நிறுத்துமிடம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. எனவே மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு அதனை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் அங்கே உள்ள நடைபாதை பள்ளி குழந்தைகளுக்கும் பொதுமக்களுக்கும் நடந்து செல்வதற்கு மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
அதிகாரிகளுக்கு உத்தரவு
இதனை அடுத்து பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள டூவிபுரம் பகுதியில் நடைபெற்று வரும் வடிகால் அமைக்கும் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு விரைந்து பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின் போது மாநகராட்சி அதிகாரிகள், முன்னாள் மாமன்ற உறுப்பினர், தி.மு.க. வட்ட செயலாளர் ரவீந்திரன், பகுதி செயலாளர் ரவி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் மற்றும் பிரபாகரன், ஜாஸ்பர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.