சாலையை சீரமைக்க கோரி கிராமமக்கள் சாலை மறியல்
- குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- இதில் பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே மாணிக்க ம்பட்டி -ராஜக்காள்பட்டி செல்லும் சாலை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது. இந்தப் பகுதியில் குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளது.
இந்த வழியாக அதிக கனரக வாகனங்கள் செல்வதால் சாலை முழுவதும் தற்போது குண்டும் குழியுமாக காணப்படுகிறது. மேலும் சாலையோரமாக குடியிருப்போர் வீடுகள் முழுவதும் தூசி பரவி காற்று மாசு ஏற்படுகிறது.
மழைக்காலங்களில் பள்ளங்களில் மழைநீர் தேங்கி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் உடனடியாக தார் சாலை அமைத்து தரக்கோரி அப்பகுதி கிராம மக்கள் இன்று காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பாலமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் உடனடியாக விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன் பிறகு மறியலில் ஈடுபட்டவர்கள் கூட்டத்தை கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.