உள்ளூர் செய்திகள்

பஸ் மோதி வியாபாரி பலி

Published On 2022-10-03 13:36 IST   |   Update On 2022-10-03 13:36:00 IST
  • தனியார் பஸ் மோதி வியாபாரி பலியானார்.
  • நாவினிப்பட்டி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலூர்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள நாவினிப்பட்டியைச் சேர்ந்தவர் சர்க்கரை முகமது (வயது 60). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று காலை அவர் மோட்டார் சைக்கிளில் அதே பகுதியில் உள்ள ஆற்றுப்பாலத்தில் சென்றார்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த தனியார் பஸ் மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி அறிந்த நாவினிப்பட்டி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விபத்து பற்றி அறிந்த மேலூர் இன்ஸ்பெக்டர் சார்லஸ், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயம் பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான சர்க்கரை முகமது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது சாலை விரிவாக்கப்பணி காரண மாக அடிக்கடி விபத்து நடந்து வருகிறது. எனவே சாலைப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். இந்த வழியாக செல்லும் வாகனங்கள் மித வேகத்தில் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். வியாபாரி மீது மோதிய பஸ் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்த கோரிக்கைகளை போலீசார் ஏற்றுக் கொண்டதால் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு விட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News