உள்ளூர் செய்திகள்

மாரிமுத்து

தாய்லாந்து அழைத்து செல்வதாக பெண்ணிடம் ரூ.2 லட்சம் மோசடி

Published On 2022-10-08 09:26 GMT   |   Update On 2022-10-08 09:26 GMT
  • தாய்லாந்து அழைத்து செல்வதாக பெண்ணிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
  • பெண்ணிடம் பண மோசடி செய்ததாக மாரிமுத்துவை கே.புதூர் போலீசார் கைது செய்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை

மதுரை விக்ரமங்கலத்தை சேர்ந்தவர் தெய்வம். இவரது மனைவி சுதா (வயது 41). இவர் கே.புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவில் கூறியிருப்ப தாவது:-

எனது மகன் ஞான பிரகாசம் என்ஜினீயரிங் படித்து உள்ளார். அவருக்கு வேலை தேடிக்கொண்டு இருந்தோம். அப்போது மதுரையில் சுற்றுலா ஏஜென்சி நிறுவனம் நடத்தி வரும் பாரதிராஜா, மாரிமுத்து மற்றும் செந்தில்பாண்டி ஆகிய 3 பேரும் எங்களை தொடர்பு கொண்டனர்.

அவர்கள், தாய்லாந்தில் வேலை வாய்ப்பு உள்ளது. நீங்கள் பணம் கொடுத்தால் உங்கள் மகனை அங்கு அனுப்பி வைத்து நல்ல சம்பளத்தில் வேலை வாங்கி தருகிறோம் என்று ஆசை வார்த்தை கூறினர்.

இதனை நம்பி நான் அவர்களிடம் ரூ.2 லட்சம் கொடுத்தேன். இதனை பெற்றுக் கொண்ட அவர்கள் எனது மகனை தாய்லாந்துக்கு அனுப்பாமல் மியான்மர் நாட்டுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சரிவர வேலை தரப்படவில்லை. இதனால் அவர் அங்கு கொத்தடிமையாக வேலை பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதில் தொடர்பு உடைய குற்றவாளிகளை உடனடி யாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷ னர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், அண்ணா நகர் உதவி கமிஷனர் சூரக்குமார் ஆலோசனை பேரில், கே.புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரை பாண்டியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

அவர்கள் இது தொடர்பாக சுதாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் சுற்றுலா நிறுவனத்திடம் ரூ.2 லட்சம் வழங்கியதற்கான ஆதாரங்களை வழங்கி உள்ளார். இதனை தொடர்ந்து ேமாசடியில் ஈடுபட்ட நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதில் மதுரை மாட்டுத்தாவணியில் சுற்றுலா ஏஜென்ட் நிறுவனம் நடத்தி வரும் பாரதிராஜா மற்றும் மதிச்சியம் ஜெகஜீவன் ராம் தெருவை சேர்ந்த மாரிமுத்து (வயது 39) ஆகிய 2 பேரும், ஏஜென்ட் செந்தமிழ் பாண்டி என்பவர் உதவியுடன் சுதாவிடம் ரூ.2 லட்சம் மோசடியில் ஈடுபட்டது உறுதி செய்யப் பட்டது.

இதனை தொடர்ந்து தாய்லாந்து அனுப்புவதாக கூறி பெண்ணிடம் பண மோசடி செய்ததாக மாரிமுத்துவை கே.புதூர் போலீசார் கைது செய்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News