உள்ளூர் செய்திகள்

தீபாவளியையொட்டி அன்னை சத்யா ஆதரவற்ற குழந்தைகள் மையத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புத்தாடைகள் வழங்கினார். அருகில் வெற்றிவேல், நெல்லை பாலு உள்ளனர்.

தமிழக அரசு விரைந்து தடை செய்ய நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Published On 2022-10-23 08:58 GMT   |   Update On 2022-10-23 08:58 GMT
  • முல்லை பெரியாறு சர்ச்சை குறும்படம் தொடர்பாக தமிழக அரசு விரைந்து தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
  • முல்லை பெரியாறு குறித்து கற்பனை கலந்த முழுமையாக வதந்தியை பரப்பும் குறும்படமாக இது உள்ளது.

மதுரை

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில். கூறியிருப்பதாவது:-

கேரளாவை சேர்ந்த வழக்கறிஞர் ரசூல்ஜோய் வெளியிட்ட சைன் ஆப் காட் என்றஅபத்தமான குறும்படம், கேரள-தமிழக உறவுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் உள்ளது.

முல்லை பெரியாறு குறித்து கற்பனை கலந்த முழுமையாக வதந்தியை பரப்பும் குறும்படமாக இது உள்ளது. குறிப்பாக குளோபல் டிசாஸ்டர், சேவ் கேரளா என்று வலை தளங்களில் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாயிகளுக்கு பாசன ஆதாரமாக முல்லை பெரியாறு இருந்து வருகிறது. முல்லை பெரியாறு பிரச்சினையில் பல கட்ட போராட்டங்களை கடந்துதான் மறைந்த முதல்வர் ஜெயலலிதா 2014-ம் ஆண்டு, உச்ச நீதிமன்றத்தில் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142அடியாக உயர்த்தி கொள்ளலாம், பேபி அணையை பழுது பார்க்கப்பட்ட பின் 152 அடியாக உயர்த்தி கொள்ளலாம் என்ற வரலாற்று சிறப்பான தீர்ப்பை பெற்று தந்தார்.

பல கட்ட ஆய்வில் பல வல்லுநர்கள் ஆய்வு செய்ததில், அணை உறுதி தன்மையாக உள்ளது என்று சான்றிதழ் கொடுத்துள்ளனர். அ.தி.மு.க. ஆட்சியில் 3 முறை முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தினார்கள்.

விவசாயிகளுக்கு குடிமராமத்து திட்டத்தை தந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தொடர்ந்து காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு போன்ற உரிமையை பிரச்சினைகளில் முன் நின்று களப்பணி ஆற்றினார்.

தற்போது ரூல்கர்வ் என்பதை புகுத்தி உள்ளனர். இது சட்டமும் அல்ல. அந்த விதியின் அடிப்படையில் பருவமழை காலத்தில் நீரை தேக்காமல் திறந்து விட்டு, நீர் தேக்கும் காலங்களில் பருவமழை இருக்காது. இந்த ரூல்கர்வ் என்பது விவசாயிகளுக்கு எதிரானது ஆகும்.

முல்லை பெரியாறு அணை பலகட்ட ஆய்வுக்கு பிறகு உறுதித் தன்மை உள்ளது என்று விஞ்ஞான சான்றுள்ளது. ஆனால் கேரளா புதிய அணை கட்ட பல்வேறு கற்பனை கலந்த வதந்தியை பரப்பி வருகிறது.

குறிப்பாக பிஞ்சு குழந்தைகளின் இதயங்களில் நஞ்சை விதைக்கும் வகையில் கேரளாவை சேர்ந்த ரசூல்ஜோய் வெளியிட்ட சைன் ஆப் காட் குறும்படம் வேதனையை அளிக்கிறது. இந்த குறும்படம் வன்மத்தோடு எடுக்கப்பட்டது.

இரு மாநில உறவுகளுக்கும் குந்தகம் ஏற்படும் வகையில் வன்மத்தோடு வெளியிட்டுள்ள நபர்களை சட்டப்படி கேரளா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த குறும் படத்தை தடை செய்ய வேண்டும்.

தவறான கருத்துக்களை பரப்புவது தேசத்திற்கு விரோதமான செயலாகும், கற்பனை கலந்த இந்த குறும்படத்தை தமிழ்நாடு அரசு வேடிக்கை பார்க்காமல் தடை செய்ய வேண்டும். இந்த குறும்படம் மூலம் பல்வேறு சர்ச்சைகள் ஏற்படும். முதலமைச்சர் தமிழகத்தின் ஜீவதார உரிமையை காக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News