உள்ளூர் செய்திகள்

சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெயிண்டர் கைது

Published On 2022-06-11 11:54 GMT   |   Update On 2022-06-11 11:54 GMT
  • சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெயிண்டர் கைது செய்யப்பட்டார்.
  • சிறுவனுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

மதுரை

மதுரை ஜெய்ஹிந்த் புரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் '6-ம் வகுப்பு படிக்கும் மகனுக்கு ஒருவர் பாலியல் தொல்லை கொடுப்பதாக' மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

இதன்படி மாநகர தெற்கு துணை கமிஷனர் தங்கதுரை மேற்பார்வையில், தெற்கு வாசல் உதவி கமிஷனர் சண்முகம் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். பாதிக்கப்பட்ட 6-ம் வகுப்பு சிறுவனிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் கூறுகையில், "நான் தெருவில் விளையாடிக் கொண்டு இருந்தேன். நாங்கள் வசிக்கும் அதே பகுதியில் குடியிருந்து வரும் பெயிண்டர் திடீரென என்னை வீட்டுக்குள் தூக்கி சென்றார். நான் சத்தம் போட்டேன். அவர் என்னை விடவில்லை. வீட்டுக் கதவை பூட்டிக்கொண்டு எனக்கு உடல் ரீதியாக தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். எனவே நான் கதறி அழுது கூச்சல் போட்டேன். இதன் காரணமாக அந்த நபர் தப்பிச் சென்று விட்டார் என்று போலீசாரிடம் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவன் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து 6-ம் வகுப்பு சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஜெய்ஹிந்த்புரம் அருண்குமார் (29) என்பவரை ஜெய்ஹிந்த்புரம் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News