உள்ளூர் செய்திகள்

உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட கிராம மக்கள். 

சிந்துப்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்தை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு

Published On 2022-12-23 08:09 GMT   |   Update On 2022-12-23 08:09 GMT
  • சிந்துப்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்தை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
  • 1914 ஆம் ஆண்டு முதல் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

திருமங்கலம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சிந்துபட்டி கிராமத்தில் 1914 ஆம் ஆண்டு முதல் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதனால் அருகில் உள்ள கிராமங்களான தும்மக்குண்டு, காங்கேயநத்தம், நக்கலகோட்டை, பன்னீர்குண்டு, காளப்பன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பயனடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது தமிழக அரசு பத்திரப்பதிவு அலுவலகங்களை தாலுகா வாரியாக பிரிக்கும் நடவடிக்கை எடுத்து வருகிறது. தாலுகா வாரியாக பத்திர பதிவு அலுவலகம் பிரிக்கப்படும் சூழ்நிலையில் சிந்து பட்டியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து வந்த திருமங்கலம் தாலுகா உட்பட்ட காங்கேயநத்தம், நக்கலக்கோட்டை, பன்னீர் குண்டு, பொக்கம்பட்டி, தங்களாசேரி, சென்னம்பட்டி உள்ளிட்ட கிராம பஞ்சாயத்துக்கள் திருமங்கலம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் எனவும் இதுவரையில் செயல்பட்டு உள்ள சிந்துபட்டி சார்பதிவு அலுவலகம் செல்லம்பட்டி பகுதிக்கு இடமாற்றம் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிந்து பட்டி, உடையாம்பட்டி, கட்ட தேவன்பட்டி, தும்மக்குண்டு, காளப்பன்பட்டி உள்ளிட்ட கிராம பகுதி மக்கள் பத்திர பதிவு செய்வதற்கு செல்லம்பட்டி செல்ல வேண்டும்.

இந்த நடைமுறைக்கு இப்பகுதி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். செல்லம்பட்டிக்கு இடமாற்றம் செய்வதால் பொதுமக்களுக்கு போக்குவரத்து வசதி உள்ளிட்ட பல்வேறு சிரமங்கள் ஏற்படும். எனவே சிந்துபட்டி பத்திரப்பதிவு அலுவலகத்தை இடமாற்றம் செய்யக்கூடாது எனவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

அதிகாரிகள் தரப்பில் இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படாததால் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிந்து பட்டி கிராமத்தில் உள்ள கடைகளை அடைத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னால் தொடங்கப்பட்ட இந்த சார் பதிவாளர் அலுவலகம் இன்று வரை நல்ல நிலையில் இயங்கி வருவதாகவும் இங்கிருந்து செல்லம்பட்டி செல்ல வேண்டுமானால் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளதாகவும் எனவே தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு பத்திரப்பதிவு அலுவலகத்தை இடம் மாற்றம் செய்யாமல் சிந்துபட்டியிலேயே தொடர்ந்து இயங்கி வர நடவடிக்கை எடுக்க வேண்டும் தவறும் பட்சத்தில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News