உள்ளூர் செய்திகள்

திருப்பரங்குன்றம் பகுதியில் ரெயில்வே சுரங்கபாதையில் மழைநீர் தேங்கி இருப்பதை படத்தில் காணலாம்.

சாலைகளில் தேங்கிய நீரால் வாகன ஓட்டிகள் அவதி

Published On 2022-07-18 09:08 GMT   |   Update On 2022-07-18 09:08 GMT
  • மதுரையில் நேற்று கனமழை பெய்தது.
  • சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்தனர்.

மதுரை

தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் கடுமையாக வெயில் தாக்கம் இருந்து வந்தது. இதனால் பகல் நேர வெப்பமும் அதிகமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் மதுரையில் கரு மேகங்கள் திரண்டு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் மதுரை நகர் பகுதியில் அனைத்து சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அழகர் கோவில், கடச்சநேந்தல், திருப்பரங்குன்றம், விளாங்குடி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் சூழ்ந்தது.

திருப்பரங்குன்றத்தில் உள்ள ெரயில்வே சுரங்க பாதையில் மழை வெள்ளம் குளம் போல தேங்கியது.இதனால் அந்த வழியாக செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

சுமார் 1 மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக சில இடங்களில் மின் தடையும் ஏற்பட்டது. கடந்த சில நாட்களாக வெயில் காரணமாக அதிக வெப்பம் இருந்த நிலையில் நேற்று திடீரென பெய்த கன மழை காரணமாக மதுரையில் குளிர்ந்த காற்று வீசி இதமான சூழ்நிலை நிலவி வருகிறது.

Tags:    

Similar News