உள்ளூர் செய்திகள்

கஞ்சா விற்ற ரவுடிகளிடம் இருந்து பிணைய பத்திரம்: தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. நடவடிக்கை

Published On 2022-07-27 08:27 GMT   |   Update On 2022-07-27 08:27 GMT
  • கஞ்சா விற்ற ரவுடிகளிடம் இருந்து பிணைய பத்திரம் பெறப்பட்டு அவர்களின் நெருங்கிய உறவினர்களின் அசையும்- அசையா சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டு வருகின்றன.
  • தென்மண்டலத்தில் உள்ள 10 மாவட்டங்களில் சுமார் 831 வழக்குகளில் 1450 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டது.

மதுரை

கஞ்சா விற்பனையில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டறிந்து அவர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களின் அசையும்- அசையா சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டு வருகின்றன.

மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கடந்த 3 மாதங்களில் பதிவு செய்யப்பட்ட 8 வழக்குகளில், குற்றவாளிகளிடம் இருந்து சுமார் ரூ.10 கோடி மதிப்புள்ள 31 வீடுகள், 19 மனைகள், 5 கடைகள், 8 வாகனங்கள் மற்றும் 18 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.

தென்மண்டலத்தில் உள்ள 10 மாவட்டங்களில் சுமார் 831 வழக்குகளில் 1450 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டது. இதற்கான பணிகளில் 4 டி.ஐ.ஜி.க்கள், 10 போலீஸ் சூப்பிரண்டுகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கஞ்சா வியாபாரிகளிடம் நன்னடத்தை பிணையம் பெறப்பட்டு வருகிறது. ரவுடி மற்றும் சந்தேக குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணைய–பத்திரம் பெறப்படும். இது கஞ்சா குற்றவாளிகளுக்கும் பொருந்தும் என்ற அடிப்படையில் தென்மாவட்டங்களில் 1000 பேரிடம் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, நீதிபதி முன்னிலையில் நன்னடத்தை பிணைய பத்திரம் பெறப்பட்டது.

அதன்படி மதுரையில்-142, விருதுநகர்-81, திண்டுக்கல்- 186, தேனி-271, ராமநாதபுரம்- 87, சிவகங்கை- 30, நெல்லை- 43, தென்காசி- 32, தூத்துக்குடி-104, கன்னியாகுமாரி-24 பேரிடம் பிணைய பத்திரம் பெறப்பட்டு உள்ளது.

இந்த காலகட்டத்தில் பிணைய பத்திரம் அளித்தவர்கள் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டால், விதிமுறைகளை மீறியதாக கருதி அவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தென்மண்டல போலீஸ் ஐ.ஜி அஸ்ராகார்க் தெரிவித்தார்.

Tags:    

Similar News