உள்ளூர் செய்திகள்

ஜி.எஸ்.டி. வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் அரிசி கடை மூடப்பட்டிருக்கும் காட்சி.

மதுரையில் 140 அரிசி ஆலைகள் மூடல்

Published On 2022-07-16 08:54 GMT   |   Update On 2022-07-16 08:54 GMT
  • ஜி.எஸ்.டி. வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் 140 அரிசி ஆலைகள் மூடப்பட்டுள்ளன.
  • ரூ. 300 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

மதுரை

மத்திய அரசு அரிசி, கோதுமைக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதித்துள்ளது. இதற்கு அரிசி வியாபாரிகள் கடும் கண்டனம் தெரிவித்து இன்று தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கடையடைப்பு போராட்டாம் நடைபெறும் என்று அறிவித்து இருந்தனர்.

அதன்படி மதுரை மாவட்டத்தில் இன்று ஒரு நாள் வேலைஅரிசி வியாபாரிகள் தங்களது கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து அரிசி கடைகளும் இன்று மூடப்பட்டு இருந்தன.

இது தொடர்பாக மதுரை மாவட்ட அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்க செயலாளர் அன்பரசன் கூறியதாவது:-

மதுரை மாவட்டத்தில் 140 அரிசி ஆலைகள் உள்ளன. 300 வியாபாரிகள் கடை நடத்தி வருகின்றனர். மாவட்டத்தில் தினமும் கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெறும். தமிழக அரிசி ஆலைகளுக்கு கர்நாடகா, ஆந்திரா மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நெல் மூட்டைகள் அரவைக்கு வருகிறது.

இந்த வகையில் நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் டன் அரிசி உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம் ரூ.300 கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெறும்.பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாக திகழும் அரிசி மீதான 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியை நீக்க கோரி தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகிறோம். மத்திய அரசு உடனடியாக 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரியை திரும்ப பெற வேண்டும்.

மதுரை மாவட்டத்தில் 140 அரிசி ஆலைகளை சார்ந்து தொழிலாளர்கள், லாரி உரிமையாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், அரிசி வணிகர்கள் உள்பட 1000-க்கும் மேற்பட்டோர் தொழில் செய்து வருகின்றனர். மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு காரணமாக பொதுமக்கள் மட்டுமின்றி வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள். மேலும் பொதுமக்களின் அத்தியாவசிய உணவு பொருட்கள் மீது வரி விதித்தால், ஏழை எளியோர் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.

Tags:    

Similar News