உள்ளூர் செய்திகள்

கும்பாபிஷேகம் நடந்தது.

குற்றம் பொறுத்தநாதர் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2022-08-23 14:39 IST   |   Update On 2022-08-23 14:39:00 IST
  • பரிவார தெய்வங்களுக்கு 30 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு புனித தீர்த்தங்கள் கடங்களில் வைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தன.
  • கோபுர கலசங்களுக்கு சிறப்பு மந்திர பூஜைகள் செய்யப்பட்டு புனித கடங்களில் உள்ள நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை அடுத்த மணல்மேடு அருகே தலைஞாயிறு என்ற ஊரில் குற்றம் பொறுத்த நாதர், கோல்வளை நாயகி அம்மன் கோவில் அமைந்துள்ளது.

திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் தேவார பதிகம் பாடல் பெற்றதும் ராஜராஜ சோழன் மூன்றாம் குலோத்துங்க சோழன் உள்ளிட்ட மன்னர் காலத்து 12கல்வெட்டுகள் அமையப்பெற்றதும், 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில் சூரியன் வழிபட்டு இழந்த வலிமையை பெற்றார்.

சூரியனின் வேறு பெயரான ஞாயிறு என்ற பெயரிலேயே தலைஞாயிறு என்று இந்த ஊருக்கு பெயர் வரகாரணம் என்று புராண வரலாறு கூறுகிறது.

சூரிய தீர்த்தம் உள்ளிட்ட 8 தீர்த்தங்கள் இந்த ஆலயத்தில் அமைந்துள்ளன.

சூரியன், அங்கிரஸ் கௌதமர், வாமதேவர், உள்ளிட்ட 72 முனிவர்கள், ராவணன் அனுமன் விசித்திராங்கன் உள்ளிட்டோர் ஆலயத்தை வழிபட்டு உள்ளதாக தல புராணம் தெரிவிக்கிறது.

இக் கோவிலின் கும்பாபிஷேகம் 1953ம் ஆண்டு கடைசியாக நடைபெற்றது.

அதன் பின்னர் தற்போது ஆன்மீக அன்பர்கள் உதவியுடன் கோவில் சீரமைக்கப்பட்டு கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வந்தன.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆறு கால யாகசாலை பூஜைகள் கடந்த 20ம் தேதி தொடங்கியது.

சுவாமி அம்பாள் விநாயகர் முருகன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 30 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு அங்கு புனித தீர்த்தங்கள் கடங்களில் வைக்கப்பட்டுயாக சாலை பூஜைகள் நடைபெற்று வந்தன.

6ம் கால யாகசாலை பூஜைகள் மகா பூர்ணாகுதி மற்றும் தீபாராதனையுடன் நிறைவடைந்தது.

தொடர்ந்து புனித கடம் புறப்பாடு மேளதாளங்கள் முழங்க நடைபெற்றது.

தருமபுர ஆதீன 27வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் புனித கடம் ஊர்வலம் கோவில் பிரகாரத்தில் நடைபெற்றது.

தொடர்ந்து கோபுர கலசங்களுக்கு சிறப்பு மந்திர பூஜைகள் செய்யப்பட்டு புனித கடங்களில் உள்ள நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தில் வேளாக்குறிச்சி ஆதீன மடாதிபதி, ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள், சூரியனார் கோயில் ஆதீன மடாதிபதி, ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள், திருப்பனந்தாள் காசி மடத்து இளவரசு கட்டளைத் தம்பிரான் சுவாமிகள், மலேசிய தொழிலதிபர்டத் தோ.கலைச்செல்வன், தருமையாதீன பொது மேலாளர் கோதண்டராமன், ஆதீன வேத சிவாகம பாடசாலை நிர்வாக இயக்குனர் குரு சம்பத், கல்லூரி செயலாளர் செல்வநாயகம், தலைஞாயிறு ஊராட்சி மன்ற தலைவர் சேரன் செங்குட்டுவன், ஒன்றிய கவுன்சிலர் வட.வீரபாண்டியன், தமிழ் மாநில காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் கார்த்திகேயன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News