உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி பெண் கொலை: 3 பேரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை

Published On 2023-04-01 13:33 IST   |   Update On 2023-04-01 13:33:00 IST
  • நேற்று முன்தினம் இவர் வீட்டில் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
  • இரவு அந்த பகுதிக்கு யாரும் வந்தார்களா? என போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அடுத்த தொன்னையன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 51). கணவரை இழந்தவர். நேற்று முன்தினம் இவர் வீட்டில் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இந்த கொலை குறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார்கள். மேலும் மோப்ப நாய் கொண்டும் விசாரணை நடத்தப்பட்டது.

கொலை செய்யப்பட்ட சரஸ்வதிக்கு பழையபேட்டையில் நிலம் ஒன்று இருந்ததும், அதை ரூ.35 லட்சத்திற்கு விற்று பணத்தை வீட்டில் வைத்திருந்ததும், அந்த பணத்தையும், அவர் அணிந்திருந்த நகையையும் கொள்ளையடிக்க இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட சரஸ்வதியின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சம்பவ இடத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் நேற்று முன்தினம் விசாரணை நடத்தினார்.

நேற்று போலீஸ் சூப்பிரண்டு அங்கு விசாரணை நடத்தினார். சரஸ்வதியின் செல்போனுக்கு யாரெல்லாம் பேசினார்கள். இரவு அந்த பகுதிக்கு யாரும் வந்தார்களா? என போலீசார் விசாரணை நடத்தினார்கள். மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

இந்த கொலை தொடர்பாக லாரி டிரைவர் ஒருவர் உள்பட மொத்தம் 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News