அமராவதி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்த கோரிக்கை
- முன்னாள் அமைச்சர், கரூர் கலெக்டரிடம் கோரிக்கை மனு
- ரசாயனம் கலந்த இந்த தண்ணீரை பயன்படுத்துவதால் தொற்று நோய் பரவி வருகிறது.
கரூர்,
கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கரை, முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அவர் அளித்த அந்த மனுவில்,
வேடசந்தூர் வழியே கரூர் மாவட்டம் அமராவதி ஆற்றில், குடகனாறு கலக்கிறது. தற்போது குடகனாறில் இருந்து வரும் தண்ணீரில் ரசாயன கழிவு நீரும் கலந்து அமராவதி ஆற்றில் சேருகிறது. ஆண்டாள் கோவில் கிழக்கு, மேற்கு, பள்ளபாளையம், கருப்பம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதி பொது மக்களின் குடிநீர் ஆதாரமாக அமராவதி ஆறு உள்ளது. இப்பகுதியில் பல குடிநீர் திட்டங்கள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ரசாயனம் கலந்த இந்த தண்ணீரை பயன்படுத்துவதால் தொற்று நோய் பரவி வருகிறது. ஆண்டாள் கோவில் தடுப்பணையில் மீன்கள் செத்து மடிகின்றன. எனவே கழிவு நீர் கலப்பவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.