கனமழையால் 60க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர்
- கனமழையால் 60க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் சூழ்ந்தது,
- தண்ணீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள்
கரூர்:
கரூர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கரூர் சுற்று பகுதியில் உள்ள தான்தோன்றி மலை மற்றும் கணபதி நகர், ஜீவா நகர், அன்பு நகர் உள்ளிட்ட சுற்று வட்டார மேட்டு பகுதிகளிலிருந்து மழை நீர் தாழ்வான பகுதியான கலைஞர் நகரில் வந்து சூழ்ந்துள்ளது, இந்த மழைநீர் 60க்கும் மேற்பட்ட வீடுகளில் புகுந்ததால் அப்பகுதி மக்கள் வீட்டிற்குள் செல்ல முடியாமலும், வெளியில் வர முடியாமல் பல்வேறு அவதிக்குள்ளாகியுள்ளனர், தொடர்ந்து அப்பகுதியில் உள்ள புதர்கள் மற்றும் பள்ளங்களில் தங்கியுள்ள பாம்புகள் மற்றும் விஷ வண்டுகள், பூச்சிகள் அப்பகுதிகளில் வெளியில் வந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது.
இதனை அறிந்த கரூர் மாநகராட்சி நகர் நல அதிகாரிகள், மற்றும் தூய்மை பணியாளர்கள் வீடுகளில் சூழ்ந்துள்ள மழை நீரை வெளியேற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தொடர் மழை பெய்யும் காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடப்பது வழக்கமாக இருந்து வருகின்றது என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர், இனி மழை காலங்களில் இப்பகுதிக்கு மழை நீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைத்துள்ளனர், இப்பகுதி பள்ளமான பகுதி குளம் என்றும் சிலர் தெரிவிக்கின்றனர்.