புன்னம் சத்திரம் அருகே குட்கா விற்ற 2 பேர் மீது வழக்கு
- புன்னம் சத்திரம் அருகே குட்கா விற்ற 2 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது
- இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் ரெங்கம்பாளையம் பிரிவு அருகே உள்ள பெட்டிக்கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா, பான்பராக், ஹான்ஸ் மற்றும் பல்வேறு வகையான புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்து வருவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனையிட்டனர். அப்போது பெட்டி கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது.
இதையடுத்து புகையிலை பொருட்களை விற்பனை செய்த ராமன் (வயது 22) என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். அதேபோல் வேலாயுதம்பாளையம் ரவுண்டானா அருகில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த ரியாத் (22) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.