உள்ளூர் செய்திகள்

கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை

Published On 2022-10-13 09:14 GMT   |   Update On 2022-10-13 09:14 GMT
  • கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்
  • குடும்ப பிரச்சினை காரணமாக

கரூர்

கரூர் மாவட்டம் வெள்ளியணை சமத்துவபுரத்தை சேர்ந்தவர் சிவானந்தம் (வயது 33) கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மோகனாம்பாள் (32) என்ற மனைவியும், தர்ஷன் (6), பிறந்து 37 நாட்களான ஆண் குழந்தை என 2 குழந்தைகள் உள்ளன. தற்போது சிவானந்தம் குடும்பத்துடன் அதே பகுதி மணவாடி ஊராட்சி கல்லுமடை காலனி அம்மன் நகரில் வசித்து வருகிறார்.

இந்தநிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கடுமையான மன அழுத்தத்தில் இருந்த மோகனாம்பாள், தானாக உளறிக்கொண்டிருப்பதாக கூறி நல்லிசெல்லிபாளையத்தில் உள்ள மாமியார் ராணி வீட்டில் நேற்று முன்தினம் காலையில் சிவானந்தம் விட்டு சென்றதாக கூறப்படுகிறது. அன்று மாலை சிவானந்தத்தை செல்போனில் அழைத்த மோகனாம்பாளின் அக்கா ஜானகி, தனது தங்கையை காணவில்லை என கூறியுள்ளார்.

இதனையடுத்து சிவானந்தம் மற்றும் உறவினர்கள் அவரை தேடியபோது அங்குள்ள தனியார் தோட்டத்து கிணற்றின் அருகே மோகனாம்பாளின் செருப்பு மட்டும் இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கிணற்றில் குதித்து தண்ணீரில் மூழ்கி இறந்து இருக்கலாம் என கருதி, இது குறித்து வெள்ளியணை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து நேற்று காலை வெள்ளியணை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காசிவிஸ்வநாதன் தலைமையில் போலீசார் மற்றும் கரூர் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் தீயணைப்பு படைவீரர்கள் கிணற்றில் இருந்து இறந்த நிலையில் மோகனாம்பாளின் உடலை மீட்டனர். பின்னர் போலீசார் மோகனாம்பாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News