உள்ளூர் செய்திகள்

புன்னம் சத்திரம் அருகே மின் கசிவு காரணமாக குடிசை வீடு தீப்பிடித்தது

Published On 2023-06-21 13:39 IST   |   Update On 2023-06-21 13:39:00 IST
  • புன்னம் சத்திரம் அருகே மின் கசிவு காரணமாக குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது
  • ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.

கரூர்:

கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் அருகே உப்புப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 45), கூலிதொழிலாளி. இவர் கரூர்-ஈரோடு மெயின் ரோட்டை ஒட்டியுள்ள அறுசுனை என்ற இடத்தில் குடிசை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று சரவணன் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளியே சென்று இருந்தனர். அப்போது மின் கசிவு காரணமாக வீட்டின் கூரையில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர்.

ஆனால் முடியவில்லை. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குடிசை வீட்டில் வேகமாக எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அருகே உள்ள வீடுகளுக்கு தீ பரவாமல் தடுத்தனர். இதனால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது. இருப்பினும் குடிசை வீடு முழுவதும் எரிந்து சாம்பலானது. இதில் வீட்டில் வைத்திருந்த பாத்திரங்கள், துணிகள், உணவுப் பொருட்கள் மற்றும் ஒரு மொபட் உள்பட ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News