சேவை குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்டவருக்கு தனியார் நிதி நிறுவனம் ரூ.20 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்
- நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
- ரூ.20 ஆயிரம் நஷ்டஈடு மற்றும் வழக்கு செலவு தொகை ரூ. 5 ஆயிரம்
நாகர்கோவில் :
குமரி மாவட்டம் பள்ளியாடியை சேர்ந்த எட்வின்பால், புதிய மோட்டார் சைக்கிள் வாங்க திட்டமிட்டார். இதற்காக மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்திடம் கடன் வாங்கினார். இதனை தொடர்ந்து இரு சக்கர வாகனத்தை பதிவு செய்த ஒரிஜினல் ஆர்.சி. புத்தகம், நிதி நிறுவனம் வசம் இருந்தது. இந்த நிலையில் ஆர்.சி. புத்தகம் தொலைந்து விட்டது என நிதி நிறுவனம் கூறியது. இதனைத் தொடர்ந்து எட்வின்பால், வக்கீல் நோட்டீசு அனுப்பினார். ஆனால் உரிய பதில் கிடைக்காததால், கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் எட்வின் பால் வழக்கு தொடர்ந்தார்.
ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் வழக்கை விசாரித்து, நிதி நிறுவனத்தின் சேவை குறைபாட்டினை சுட்டிக் காட்டினர். மேலும் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு புதிய ஆர்.சி. புத்தகம், ரூ.20 ஆயிரம் நஷ்டஈடு மற்றும் வழக்கு செலவு தொகை ரூ. 5 ஆயிரம் ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தர விட்டனர்.