கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சீசன் கடைகள் ஏலம் - நாளை நடக்கிறது
- சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களில் பெரும்பாலானவர்களும் வந்து செல்வார்கள்
- கன்னியாகுமரிசிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன் முன்னிலையில் இந்த சீசன் கடைகள் ஏலம் நடக்கிறது
கன்னியாகுமரி :
இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்து உள்ளது கன்னியாகுமரி. இங்குவருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர் டிசம்பர் ஜனவரி ஆகிய 3 மாதங்களும் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி சபரிமலைக்கு செல்லும் வையப்ப பக்தர்களில் பெரும்பாலானவர்களும் வந்து செல்வார்கள். இதனால் இந்த 3 மாத காலமும் இங்கு சீசன் காலமாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் கடந்த 17-ந் தேதி தொடங்கியது. இந்த சீசனையொட்டி கன்னியாகுமரியில் நடைபாதைகளில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சீசன் கடைகள் தனியாருக்கு ஏலம் விடப்படும்.
இந்த ஆண்டு சீசன் கடைகள் ஏலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் நாளை (28-ந்தேதி) காலை 10 மணிக்கு நடக்கிறது. கன்னியாகுமரிசிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன் முன்னிலையில் இந்த சீசன் கடைகள் ஏலம் நடக்கிறது. இதையொட்டி கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடும் செய்யப்பட்டு உள்ளது. இந்த சீசன் கடைகளை ஏலம் எடுக்க வெளியூர் வியாபாரிகள் நேற்று முதலே வந்து குவிந்த வண்ணமாக உள்ளனர்.