உள்ளூர் செய்திகள்

நாகர்கோவில் அருகே பெண்ணிடம் நகை பறித்த கொள்ளையன் கைது

Published On 2023-05-10 07:05 GMT   |   Update On 2023-05-10 07:05 GMT
  • தப்பி ஓடிய நபரை பிடிக்க 2 தனிப்படை அமைப்பு
  • கொள்ளை வழக்கில் தொடர்பு உண்டா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நாகர்கோவில் :

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் பள்ளவிளை பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மனைவி வசந்தா (வயது 58).

இவர் நேற்று காலை வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் வசந்தாவிடம் முகவரி கேட்பது போல் பேச்சு கொடுத்தனர். அப்போது பைக்கில் இருந்த வாலிபர் ஒருவர் வசந்தாவின் கழுத்தில் கிடந்த 8 பவுன் நகையை பறித்தார். சுதாரித்துக் கொண்ட வசந்தா திருடன் திருடன் என கூச்சலிட்டார். அதற்குள் மர்மநபர்கள் தப்பி சென்றனர்.

வசந்தாவின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்களை பிடிக்க முயன்றனர். பொதுமக்கள் துரத்தியதில் பைக்கில் இருந்து வாலிபர் ஒருவர் தவறி கீழே விழுந்தார். அவரை பொதுமக்கள் பிடித்தனர். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார். வாலிபர் பிடிபட்டது குறித்து ஆசாரிப்பள்ளம் போலீ சாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பொதுமக்கள் பிடியில் இருந்த வாலிபரை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது பிடிபட்ட வாலிபர் நெல்லை டவுன் பகுதியை சேர்ந்த அய்யப்பன் (19) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

தப்பி ஓடிய நபர் குறித்த விவரங்களை போலீசார் அவரிடம் கேட்டனர். ஆனால் அவர் சரிவர பதில் கூறவில்லை. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தப்பி ஓடிய வாலிபரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். பிடிபட்ட அய்யப்பனுக்கு வேறு கொள்ளை வழக்கில் தொடர்பு உண்டா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News