ஆரல்வாய்மொழி அருகே கோழிப்பண்ணை அதிகாரி விபத்தில் பலி
- எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி ஜஸ்டின் சுதாகர், கீழே விழுந்தார்.
- 10 மாத ஆண் குழந்தையும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கன்னியாகுமரி :
ஆரல்வாய்மொழி மிஷின் காம்பவுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் டேவிட் ஜான்சன். இவரது மகன் ஜஸ்டின் சுதாகர் (வயது28). இவர் தனியாருக்கு சொந்தமான கோழிப் பண்ணையில் சூப்பர்வைசராக வேலை செய்தார்.
கோழிகளுக்கு தேவையான மருந்துகளை வாங்க ஜஸ்டின் சுதாகர், காவல்கிணறு விலக்கு சென்று வருவது வழக்கம். அதன்படி நேற்றும் அவர் மருந்து வாங்க மோட்டார் சைக்கிளில் சென்றார்.
பின்னர் இரவில் அவர் ஆரல்வாய்மொழிக்கு புறப்பட்டார். குமாரபுரம் வழியாக மோட்டார் சைக்கிள் வரும்போது கண்ணு பெத்தை பகுதியில் வேகத்தடையை அவர் சரியாக கவனிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி ஜஸ்டின் சுதாகர், கீழே விழுந்தார். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.
விபத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து செயல்பட்டு ஜஸ்டின் சுதாகரை மீட்டு நாகர்கோ வில் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து பார்த்து விட்டு, ஜஸ்டின் சுதாகர் இறந்து விட்டதாக கூறினார். இதனை தொடர்ந்து உடல் ஆசாரி பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது .
இதுகுறித்து உறவினர் தேவதாஸ், ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படை யில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். பலியான ஜஸ்டின் சுதாகருக்கு, அனிஸ்ஷா என்ற மனைவியும் 10 மாத ஆண் குழந்தையும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.