உள்ளூர் செய்திகள்

கொல்லங்கோடு நகராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி முழு நேர மருத்துவமனையாக மாற்ற அரசு நடவடிக்கை

Published On 2023-03-30 07:14 GMT   |   Update On 2023-03-30 07:14 GMT
  • எக்ஸ்ரே, ஸ்கேன் போன்ற வசதிகளும் எதுவும் இல்லை
  • ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்து தரம் உயர்த்துவதற்கான பணிகள்

கன்னியாகுமரி;

கொல்லங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் போதிய வசதிகள் எதுவும் இல்லாமல் ஒரு மருத்துவர் மட்டுமே பணியாற்றி வருகிறார்.பாதி நேரம் மட்டுமே இந்த ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.

இங்கு எக்ஸ்ரே, ஸ்கேன் போன்ற வசதிகளும் எதுவும் இல்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆகையால் இப்பகுதியில் மக்கள் கொல்லங்கோடு நகராட்சி தலைவர் ராணி ஸ்டீபனிடம் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இந்த கோரிக்கையின் அடிப்படையில் கொல்லங்கோடு நகராட்சி தலைவர் ராணி ஸ்டீபன், கவுன்சிலர் நீரோடி ஸ்டீபன் மற்றும் ஜெயசிங் ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் சுப்பிரமணியத்தை நேரில் சந்தித்து கொல்லங்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி முழு நேர ஆஸ்பத்திரியாக மாற்றி தர வேண்டும் என்று கோரிக்கை மனு வழங்கினர். தற்போது அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்து தரம் உயர்த்துவதற்கான பணிகள் உடனடியாக தொடங்கப்படும் என்று கடிதம் மூலம் அரசுத்துறை கூறியுள்ளது.

Tags:    

Similar News