- 30 பவுன் நகை அபேஸ்
- சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை
நாகர்கோவில்:
கொல்லங்கோடு அருகே அருள்குன்று பகுதியைச் சேர்ந்தவர் ராஜன். இவரது மனைவி தங்கம் (வயது 52). இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். தங்கம் வீட்டில் தாலி தோஷம் இருப்பதாக கூறி பெண் ஒருவர் அவரது வீட்டிற்கு வந்து பரிகார பூஜைகள் மேற்கொண்டார்.
அப்போது வீட்டில் இருந்து 30 பவுன் நகையை பூஜையில் வைத்தனர். பூஜை முடிந்த பிறகு அந்தப் பெண் நகைகளை துணி ஒன்றில் கட்டி கொடுத்து விட்டு, மாலையில் அதனை பிரித்துப் பார்க்குமாறு தங்கத்திடம் ஒப்படைத்து சென்றார்.
மாலையில் திறந்து பார்த்தபோது கவரிங் நகைகளை வைத்து இருப்பதை பார்த்து தங்கம் அதிர்ச்சி அடைந்தார்.இது குறித்து கொல்லங்கோடு போலீசில் அவர் புகார் செய்தார். புகாரின் பேரில் அந்த பெண் மீது போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். தங்கத்திடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அவர் கொடுத்த அடையாளங்களை வைத்து போலீசார் மோசடி செய்த பெண்ணை தேடி வருகின்றனர்.