உள்ளூர் செய்திகள்

நாகர்கோவிலில் இன்று கல்லூரி மாணவிகள் மஞ்சப்பை விழிப்புணர்வு தொடர் மனித சங்கிலி - கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்

Published On 2023-04-01 08:27 GMT   |   Update On 2023-04-01 08:27 GMT
  • சுமார் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.
  • தற்போது குளங்கள், கால்வாய்கள், ஏரிகள் தூர்வாரும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.

நாகர்கோவில் :

பிளாஸ்டிக் பைகளை தவிர்க்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி நாகர்கோவில் ஹோலி கிராஸ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் மாணவியர்கள் மீண்டும் மஞ்சப்பை தொடர் சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். இதில் சுமார் சுமார் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் விழாவில் பங்கேற்று தொடங்கி வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து மாபெரும் மஞ்சப்பை விழிப்புணர்வு தொடர் சங்கிலி நடத்திய தற்காக இந்தியன் வெர்ல்ட்டு நிறுவனத்தால் வழங்கப்பட்ட உலக சாதனை விருதினை ஹோலி கிராஸ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சகாய செல்வியிடம், கலெக்டர் ஸ்ரீதர் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

தமிழ்நாடு அரசு நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தற்போது குளங்கள், கால்வாய்கள், ஏரிகள் தூர்வாரும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.

மேலும், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் நீர் நிலைகளில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்று வருகிறது. பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்து அடுத்த தலைமுறையினரும் தெரிந்துகொள்ளும் வகையில் மாணவ, மாணவிகள் அனைவரிடமும் எடுத்துக்கூற வேண்டும்.

இதன் தாக்கத்தை நாம் அனைவரும் புரிந்து பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்த்திட முன்வர வேண்டும்.

தொடர்ந்து நமது மாவட்டத்தை பசுமை மாவட்டமாகவும், நெகிழி இல்லா குமரி உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவியர்கள் கலந்து கொண்டு, பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்

நிகழ்ச்சியில், மாவட்ட வன அலுவலர் இளையராஜா, சமூக நல அலுவலர் சரோஜினி, ஹோலி கிராஸ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயலாளர் கில்டா, துணை முதல்வர் லீமா ரோஸ், திருப்புமுனை இயக்குநர் நெல்சன் உள்ளிட்ட பேராசிரியர்கள், மாணவியர்கள் கலந்து கொண்டார்கள்.

Tags:    

Similar News