கலாஷேத்ரா விவகாரம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் விளக்கம்
- காவல்துறைக்கு இதுவரை எழுத்துப்பூர்வ புகார் அளிக்கப்படவில்லை.
- கலாஷேத்ரா விவகாரத்தில் அரசு உரிய விசாரணை மேற்கொண்டு வருகிறது.
சென்னை:
கலாஷேத்ரா விவகாரம் தொடர்பாக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இதையடுத்து கலாஷேத்ரா விவகாரம் தொடர்பாக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஒன்றிய அரசின் கலாசார துறையின் கீழ் கலாஷேத்ரா அறக்கட்டளை இயங்கி வருகிறது.
கலாஷேத்ரா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது. 210 மாணவிகளிடம் தேசிய மகளிர் ஆணையம் விசாரணை நடத்தியது.
காவல்துறைக்கு இதுவரை எழுத்துப்பூர்வ புகார் அளிக்கப்படவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவிகளுக்கு காவல்துறை சார்பில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
கலாஷேத்ரா விவகாரத்தில் அரசு உரிய விசாரணை மேற்கொண்டு வருகிறது. தவறு நடந்திருந்தால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.