உள்ளூர் செய்திகள்

பேரணியை திருவாடுதுறை ஆதீன 24-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள், மேயர் சரவணன் கொடியசைத்து தொடங்கி வைத்த காட்சி.

நெல்லையப்பர் கோவில் ரத வீதியில் திருவாடுதுறை ஆதீனம் சார்பில் கயிலாய பேரணி

Published On 2023-10-08 09:04 GMT   |   Update On 2023-10-08 09:04 GMT
  • சைவத் திருமுறை நேர்முக பயிற்சி மையத்தின் 7-வது தொகுப்பு நிறைவு விழா நெல்லையில் நடைபெறுகிறது
  • பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிவனடியார்கள் பேரணியாக சென்றனர்.

நெல்லை:

திருவாடுதுறை ஆதீனத்தின் சார்பில் நடத்தப்படும் சைவத் திருமுறை நேர்முக பயிற்சி மையத்தின் 7-வது தொகுப்பு நிறைவு விழா நெல்லையில் நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியின் தொடக்கமாக நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் முன்பிருந்து தொடங்கி 4 ரத வீதிகளிலும் வலம் வரும் வகையில் திருக்கயிலாய பேரணிக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பேரணியை திருவாடுதுறை ஆதீன 24-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் தொடங்கி வைத்து 2 குதிரை பூட்டிய சாரட் வண்டியில் பேரணிக்கு முன்பாக சென்றார்.

அதனைத் தொடர்ந்து நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை, கடலூர், சேலம், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிவனடியார்கள் பேரணியாக சென்றனர். அவர்கள் சிவ வாத்தியங்கள் இசைத்தும், சங்கு நாதம் ஊதியம், கோலாட்டம் ஆடியும் பேரணியில் கலந்து கொண்டனர்.

பேரணி நெல்லையப்பர் கோவில் முன்பு தொடங்கி வாகையடி முனை தெற்கு ரத வீதி, சந்தி பிள்ளையார் கோவில், மேலரத வீதி, லாலா சத்திர முக்கு, வடக்கு ரதவீதி வழியாக மீண்டும் நெல்லையப்பர் கோவில் முன்பு வந்து அடைந்தது. பேரணியில் கலந்து கொண்டவர்கள் திருமுறை பதிகங்கள் பாடி ஊர்வலமாக சென்றனர்.

இந்த பேரணியில் நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் சரவணன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து நெல்லை பேட்டை ம.தி.தா. இந்துக் கல்லூரியில் சைவத் திருமுறை நேர்முக பயிற்சி மையத்தின் 7-ம் வகுப்பு நிறைவு விழா மாநாடு நடைபெறுகிறது.

Tags:    

Similar News