விவசாயியை வெட்டிய 2 பேருக்கு ஜெயில் தண்டனை
- தலை, கை மற்றும் வலது கால் ஆகிய இடங்களில் வெட்டினர்.
- வழக்கு மேட்டுப்பாளையம் சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம்-சிறுமுகை சாலை பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்த ஜாகீர்உசேன்.
இவர் தனது வாழை தோட்டத்திற்கு செல்வதற்காக கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 14-ந் தேதி காலை 6.30 மணிக்கு மைதானம் மாரியம்மன் கோவில் அருகே வந்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த தியாகு, சக்திவேல் ஆகியோர் ஜாகீர்உசேனிடம் மது குடிக்க பணம் கேட்டனர். இதில் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது திடீரென சக்திவேல், தியாகு இருவரும் ஜாகீர் உசேனை தகாத வார்த்தைகளால் பேசி வாழை இலை அறுக்கும் கத்தியால் ஜாகீர் உசேனின் தலை, கை மற்றும் வலது கால் ஆகிய இடங்களில் வெட்டினர். இதுதொடர்பாக ஜாகீர் உசேன் கொடுத்த புகாரின் பேரில் அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த சென்னகேசவன் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தார்.
இந்த வழக்கு மேட்டுப்பாளையம் சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் நீதிபதி சிவகுமார் தீர்ப்பு வழங்கினார். குற்றம் சாட்டப்பட்ட தியாகுவிற்கு 4 ஆண்டு சிறையும், ரூ.50 ஆயிரம் அபராதமும், சக்திவேலிற்கு 3 ஆண்டு சிறை தண்டணையும் ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து அவர் தீர்ப்பு கூறினார்.