கோவில்பட்டி புற்றுக்கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா
- விநாயகர், முருகன், சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது
- பக்தர்களுக்கு மஞ்சள், கயிறு, வளையல், இனிப்பு பிரசாதமாக வழங்கப்பட்டது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா நடைபெற்றது.
இதனையொட்டி காலை 6 மணிக்கு நடை திறக்கபட்டு விநாயகர், முருகன், சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கொலு மண்டபத்தில் சுவாமி அம்பாள் உற்சவர் ரிஷப வாகனத்தில் அலங்கரிக்கப்பட்டு சங்கல்பம், கணபதி பூஜை, திருமண வைபவ ஹோமம் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து 11 வகை சீர்வரிசை தட்டுகள் கோவில் வளாகத்தை சுற்றி வந்து சுவாமி அம்பாள் காப்பு கட்டுதல் திருமாங்கல்யம் கட்டுதல், திருமண சடங்கு நடந்தது.
பூஜைகளை சுப்பிரமணிய ஐயர் செய்தார். இவ்விழாவில் கோவில் தலைவர் ராஜபாண்டி, பொருளாளர் சுப்பிரமணியன் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு மஞ்சள், கயிறு, வளையல், இனிப்பு பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தேவகி, ரவி நாராயணன், உமா சங்கரி முத்துமுருகன், கீதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் செய்தனர்.